காவிரி: மத்திய அரசைக் கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டம்: வெறிச்சோடிய சென்னை சாலைகள்
மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் நடத்தப்படும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சென்னைத் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக்கிடக்கின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட பல முக்கிய கட்சிகள் இந்தப் போரட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்கள் மற்றும் பெரும்பாலான போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இந்த அழைப்பை ஏற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இன்று காலையில் இருந்தே பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள், லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் குறைவான எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயங்குகின்றன.
வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னையில் உள்ள பெரும்பாலான கடைகள் , வணிக வளாகங்கள், உணவகங்கள், தேநீர் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் சென்னையின் பல முக்கிய சாலைகள் வெறிச்சோடிக்கிடக்கின்றன.