சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை புதிய மெட்ரோ வழித்தடம்: முதல்வர்
சென்னை மெட்ரோ ரயில் நான்காவது வழித்தடம் குறித்த அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை நான்காவது வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 45 கிலோமீட்டர் நீளத்திற்கு முதற்கட்டமாக கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை மற்றும் சின்னமலையிலிருந்து விமான நிலையம் வரையிலான 21 கிலோமீட்டர் நீளமுள்ள உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் பயணிகள் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
சுரங்க வழித்தடமான கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரையிலான முதல் சுரங்க வழித்தடத்திலும் சேவை தொடங்கியுள்ளது. மேலும்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித்தடத்தை வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் / விம்கோ நகர் வரையிலான ஒன்பது கிலோமீட்டர் நீளத்திற்கு நீட்டிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மெட்ரோ ரயிலின் 4வது வழித்தடத்தை முதல்வர் பழனிசாமி சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார். அதில் கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தவல்லி வரை வடபழனி வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று பழனிசாமி கூறியுள்ளார். மேலும் கோவையில் மெட்ரோ ரயில் இயக்கம் குறித்து ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.