நிதி நெருக்கடியில் 'நாதெல்லா ஜூவல்லர்ஸ்'... கடைகளை மூடுவதால் சீட்டு பணம் கட்டியவர்கள் தவிப்பு
சென்னை : நிதி நெருக்கடியில் இருப்பதால் சென்னையின் பிரபல நகைக்கடையான நாதெல்லா ஜூவல்லர்ஸ் மூடுவிழா காண உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் 77 ஆண்டுகள் பாரம்பரியமிக்க நாதெல்லா ஜூவல்லர்ஸ் நகைக்கடையானது அதிக அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்டது. பழமைவாய்ந்த நம்பிக்கையான கடை என்பதால் இந்தக் கடையில் ஏராளமானோர் தங்க நகை சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
சென்னையில், தி.நகர், புரசைவாக்கம், வேளச்சேரி என சுமார் எட்டு இடங்களில் 'நாதெல்லா ஜூவல்லர்ஸ்' தங்க நகை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் தங்க நகை சேமிப்பு திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து, மாதம், ஆயிரத்தில் இருந்து, 10 ஆயிரம் ரூபாய் என, பல லட்சம் ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் தவணைத்தொகை கட்டி வந்துள்ளனர்.

நிர்வாகம் இழுத்தடிப்பு
10 முதல், 15 மாதத்திற்குள், கட்டிய பணத்திற்கு தங்க நகை தருவதாக உறுதி அளிக்கப்பட்ட நிலையில் முதிர்வு காலம் முடிந்து தங்க நகை கேட்டுச் சென்றவர்களிடம் சிறிது காலம் காத்திருக்குமாறு நகைக்கடை கூறியுள்ளது. ஆனால் 15 மாதங்களுக்கு மேலாகியும் பணத்தைத் திருப்பித் தராமல் நிர்வாகம் இழுத்தடித்ததாகத் தெரிகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்
இதனால் பாதிக்கப்பட்ட சில வாடிக்கையாளர்கள் தாம்பரம் போலீசிடம் புகார் அளித்துள்ளனர். ஏறத்தாழ ரூ. 17.57 லட்சம் வரை நாதெல்லா கடை மோசடி செய்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென புரசைவாக்கத்தில் உள்ள நாதெல்லா கடை மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாதெல்லா அறிவிப்பு
இதனிடையே நாதெல்லா ஜூவல்லர்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தங்க நகை சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்தவர்களின் பணம் நிச்சயம் விரைவில் திருப்பி தரப்படும். வாடிக்கையாளர்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை என்று நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

பதற்றம் வேண்டாம்
நகைக்கடை நிதி நெருக்கடியில் இருப்பது உண்மை தான். நாதெல்லாவிற்கு ள்ள பரம்பரை சொத்துகளை விற்று வாடிக்கையாளர்களின் பணம் திருப்பி அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற என்று நாதெல்லா ஜூவல்லரியின் நிர்வாக இயக்குனர் பிரசன்ன குமார் பிசினஸ் ஸ்டான்டர்ட்க்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பு
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதும் நிதி நெருக்கடிக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. எனினும் ஆசை ஆசையாய் நகை சீட்டு கட்டியவர்கள் எப்போது பணம் கைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications