வடியாத வெள்ளம்... திறக்கப்படும் பள்ளிகள்... எங்கே செல்வது?- தவிப்பில் ‘நிவாரண முகாம்’ மக்கள்!
சென்னை: சென்னையில் மழை குறைந்து வெயில் அடிக்கத் துவங்கியுள்ள நிலையில், நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் வேறு எங்கே செல்வது என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன.
அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மழை வெள்ளத்தில் ஏறக்குறைய மூழ்கி மீண்டது என்றால் மிகையில்லை. சென்னை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், அங்கிருந்த மக்கள் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகள் விடுமுறை...
மழை காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் காலியாக இருந்த வகுப்பறையில் வெள்ளத்தில் பாதித்த மக்கள் தங்கியிருந்தனர்.

நாளை திறப்பு?
இந்நிலையில், நேற்றும் இன்றும் சென்னையில் மழை குறைந்து, வெயில் அடிக்கிறது. இதனால் நாளை வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் எனத் தெரிகிறது. பல தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோருக்கு நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயக்கும் என போன் வாயிலாக தகவல் தெரிவித்து வருகின்றனர்.

நிவாரண முகாம் மக்கள்...
இதனால், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இன்னமும் தங்கள் வீடுகளில் வெள்ளம் வடியாத நிலையில், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டால் வேறு எங்கு செல்வது என்ற குழப்பம் அவர்கள் மத்தியில் உள்ளது.

எங்கே செல்வது?
இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் உள்ளது. தங்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடம் தேவை என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நோய்த் தொற்றும் அபாயம்...
பல இடங்களில் ஏரிகளில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால் மழை நின்றும், தொடர்ந்து குடியிருப்புகள் நீரில் மூழ்கியபடியே உள்ளன. எனவே, மீண்டும் வீடுகளுக்குத் திரும்பினால் நோய்த் தொற்று அபாயமும் ஏற்படும் என்ற அச்சமும் மக்களிடையே உள்ளது.












Click it and Unblock the Notifications