அக்டோபர் 10ம் தேதி ஆஜராக வேண்டும்... மு.க. ஸ்டாலினுக்கு சென்னை கோர்ட் உத்தரவு
சென்னை: அக்டோபர் 10ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவை கோர்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த ஜூலை 22ம் தேதி சட்டசபைக்கு வெளியே ஸ்டாலின் பேட்டி அளித்த போது, தி.மு.க.,வினர் சபைக்கு வருவது முதல்வருக்கும் அமைச்சருக்கும் சபாநாயகருக்கும் பிடிக்கவில்லை என கூறியிருந்தார். இது, முதல்வரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது எனக் கூறி, முதல்வரின் சார்பில், ஸ்டாலின் மீது அரசு வழக்கறிஞர் ஜெகன் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், நீதிமன்றத்தில் ஸ்டாலின் நேற்று ஆஜராக வேண்டும் என, சம்மன் அனுப்பப்பட்டிருந்தது; ஆனால், ஸ்டாலின் ஆஜராகவில்லை.
அதற்குப் பதில் ஸ்டாலின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முக்கிய கூட்டத்தில், கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டால், மற்றொரு தேதியில் ஸ்டாலின் ஆஜராவார் என தெரிவித்தார்.
இதை ஏற்ற நீதிபதி ஆதிநாதன், அக்டோபர் 10ம் தேதி மு.க. ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.