இன்னும் அணையாத தீ... சென்னை சில்க்ஸ் கட்டடம் இடியும் அபாயம்.. அதிர்ச்சியில் தி.நகர்!
தீவிபத்தில் பாதிக்கப்பட்டுள்ள சென்னை தி.நகர் தி சென்னை சில்க்ஸ் துணிக்கடை இடியும் அபாயத்தில் உள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
சென்னை: சென்னை திநகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அக்கட்டடம் இடியும் அபாயத்தில் உள்ளதாக தெரிகிறது.
பிரபல துணிக்கடையான தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படும் இக்கடையில் இருந்து ஊழியர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் விரைந்து தீயை அணைக்க 7 மணிநேரமாக போராடி வருகின்றனர். 15 தீயணைப்பு வாகனங்கள் வரழைக்கப்பட்டுள்ளன. தீ கட்டுக்குள் உள்ள போதிலும் கட்டடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் கடையின் கண்ணாடிகள் உடைந்து கரும்புகை வெளியேறி வருகிறது.

அபாயகர பகுதிகள்
தீவிபத்து காரணமாக சென்னை சில்க்ஸ் அருகில் உள்ள ஸ்ரீ குமரன் தங்கமாளிகை உள்ளிட்ட கடைப் பகுதிகள் அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிபத்து நடந்த இடத்தை சென்னை கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு செய்துள்ளார். உஸ்மான் சாலையில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

குபுகுபு புகை
கடைக்குள் கரும்புகை சூழ்ந்துள்ளதால் கடைக்குள் உள்ள பொருள்கள் சேதமதிப்பு குறித்து தெரியவில்லை. மேலும் தீயணைப்பு வீரர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இதனிடையே கட்டடத்துக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இடியும் அபாயம்
இதனால் 7 மாடிக் கட்டடம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரும்புகையால் கட்டடம் பலமிழந்துள்ளதால் கட்டடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். ஆய்வில் மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆணையர், உயரதிகாரிகள் ஆகியோர் உள்ளனர். அதுவரை அக்கம்பக்கத்தில் உள்ள கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் வர வேண்டாம்
தீவிபத்தது நடந்த பகுதியை பார்க்க பொதுமக்கள் யாரும் இப்பகுதிக்கு வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications