கொட்டிய மழை... நடுங்கும் குளிர்... இருளில் உணவு, குடிநீர் இன்றி தவித்த அந்த 3 நாட்கள்...
சென்னை: இது அடை மழை... இது அட்டகாச மழை... என்று டி.ஆர். பாணியில் மழையை கொண்டாடினாலும் விடாமல் பெய்த அடைமழை சென்னைவாசிகளை முடக்கித்தான் போட்டுள்ளது. புறநகர்வாசிகளின் பாடு படுதிண்டாட்டம்தான். கரண்ட் இல்லை... குடிக்க தண்ணியில்லை.... சாப்பிட முடியலை, குளிக்க முடியலை, தூங்கி ஒருவாரம் ஆச்சு என்று தங்களின் துயரங்களை கதை கதையாக சொல்கின்றனர்.
மழை ஒருவழியாக ஓய்ந்தாலும் பெரும்பாலான வீட்டில் தண்ணீர் நிற்கிறது. இதனால் கரண்ட் கனெக்சனை கட் செய்து விட்டார்கள். வீட்டில் சமைக்க முடியாமல் ஹோட்டலில்தான் வாங்கி சாப்பிடுகிறோம். வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு போக 300 ரூபாய் ஆகிறது. உணவுக்கும், போக்குவரத்திற்கும் மட்டும் ஒரு நாளைக்கு 600 ரூபாய் செலவாகிறது என்கின்றனர்.
நகரவாசிகளின் பாடு இப்படி என்றால் புறநகர்வாசிகளோ பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டிய வீடுகளை விட்டும், கார்கள், பைக்குகளை அப்படியே போட்டுவிட்டு உயிர் தப்பினால் போதும் என்று வெளியேறிவிட்டனர். வீட்டை விட்டு வெளியேற மறுத்தவர்கள், மின்சாரம் இன்றி இருட்டில் தவித்துள்ளனர். உணவு, குடிநீர் இன்றி கழித்த திகீர் நாட்களை ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மின்சாரம் துண்டிப்பு
முழங்கால் அளவு தண்ணீர் இருக்க, ஒரு சில பகுதிகளில் கீழ் தளங்களையே மூழ்கடித்து விட்டது. இதன்காரணமாக மின்சாரத்தை துண்டித்து விட்டனர். மழையை டிவியில் பார்த்து ரசித்த மக்கள் மின்சாரம் இல்லாமல் மழை, வெள்ளத்தில் அவதிப்பட்டனர்.
படையெடுத்த விஷ ஜந்துக்கள்
வெள்ளத்தில் பாம்புகள், விஷ பூச்சிகள் மிதந்து வரவே மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்தனர். அவர்களில் பெரும்பாலோனோருக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு கிடைத்தது. அதுவும் சில தினங்களில் நிறுத்தப்படவே உணவும், தண்ணீரும் கிடைக்காமல் தவித்துப் போயினர்.
உணவுக்கு தவிப்பு
சென்னை பெரும்பாக்கம் மக்கள் தொடர்ச்சியாக 84 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் பெரும் சிரமத்தில் தவித்துள்ளனர். அங்குள்ள காந்திநகர் சொசைட்டியில் உள்ள குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒருவாரம் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தனர். மின்சாரம் இல்லாமல் செல்போன்கள் செயலிழக்கவே வெளிவட்டார தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. உணவு, குடிநீருக்கு ஏங்கி தவித்துள்ளனர்.
அந்த மூன்று நாட்கள்
3 நாட்கள் மின்சாரம் இல்லை. வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதால் மாடிப்படியில் படுத்து உறங்கினேன். அதிர்ஷ்டவசமாக என்னிடம் கொஞ்சம் அரிசியும்,
பருப்பும் இருந்தது. அதைவைத்து நிலைமையை சமாளித்துக் கொண்டேன். 30 மணி நேரம் மழை நீர் வீட்டுக்குள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. என் கண் முன் நடந்த அனைத்தும் எனக்கு
பீதியை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் நேபாளத்தில் இருந்து வாட்ச்மேன் வேலைக்கு வந்த ஒருவர்.
நிம்மதி பெருமூச்சு
மழை ஓரளவிற்கு நின்று வெள்ளம் வடியவே, புதன்கிழமை இரவு பெரும்பாக்கம் காந்திநகர் சொசைட்டி குடியிருப்பில் மின்விநியோகம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர். எனினும் சோழிங்கநல்லூரில் இருந்து பெரும்பாக்கம் வரைச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் அடுத்த சிக்கல் ஆரம்பமாகியுள்ளது.
மிரட்டும் மழை
குடியிருப்புகளை விட்டு வெளியேறியவர்களின் வாகனங்கள் அனைத்தும் பழுதடைந்து விட்டன. வீடுகளில் இருந்த ப்ரிட்ஜ், வாஷிங் மெசின் ஆகிய மின்சாதன பொருட்களில் சேறு அடைத்துக்கொண்டுள்ளது. வீடுகளை சரிசெய்து இயல்பு நிலைக்கு திரும்ப எப்படியும் ஒருவாரம் ஆகிவிடும் என்று கூறுகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் அடுத்த மழை மிரட்டுவதால் ஆடித்தான் போயுள்ளனர் புறநகர்வாசிகள்.