சென்னையில் அடைமழை: அனைத்து சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து தடை
சென்னை: விடாமல் கொட்டி வரும் கனமழையால் சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகள் அனைத்திலும் வெள்ளநீர் நிரம்பியுள்ளது இதனால் அனைத்து சுரங்கப்பாதைகளிலலும் போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நள்ளிரவு முதல் விடாமல் கொட்டி வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழைநீர் இடுப்பளவுக்கு மேலாக தேங்கியதால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியவில்லை.
சென்னையில் போக்குவரத்து வசதிக்காக அமைக்கப்பட்ட 16 சுரங்கப் பாதைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் பஸ் போக்குவரத்து மட்டுமின்றி அனைத்து வாகன போக்குவரத்திற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒருசில சுரங்கப்பாதையில் முழுமையாக தண்ணீரில் மூழ்கியதால் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. கடந்த முறை பல இடங்களில் பேருந்துகள் மூழ்கியதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதைகளில் வெள்ளம்
மாம்பலம் அரங்கநாதன் சுரங்கப்பாதை, சேத்துப்பட்டு சுரங்கப் பாதை, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, நங்கநல்லூர் தில்லைகங்கா நகர், சைதாப்பேட்டை, பரங்கிமலை சுரங்கப்பாதை உள்ளிட்ட அனைத்து சுரங்கபாதைகளை மழைநீர் சூழ்ந்து இருப்பதால் வாகன போக்குவரத்து நடைபெறவில்லை.
|
புறநகர் சுரங்கப்பாதைகள்
தாம்பரம், மீனம்பாக்கத்தில் உள்ள சுரங்கப் பாதைகளும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. சுரங்கப்பாதைகளில் இருந்து மழைநீரை வெளியேற்ற அமைக்கப்பட்ட மோட்டார் பம்புகளும் நேற்று பெய்த மழையில் மூழ்கின.
மோட்டார்கள் மூழ்கின
மோட்டார் மூலம் வெள்ளநீரை வெளியேற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்த போதிலும் கன மழையால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீரை கட்டுப்படுத்த முடியவில்லை. மழை நின்றால்தான் சுரங்கப்பாதையில் இருந்து மழைநீரை முழுமையாக வெளியேற்ற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
வடசென்னையில் பாதிப்பு
வியாசர்பாடி, கன்னிகாபுரம், புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதிகளில் மழை வெள்ளம் இடுப்பளவுக்கு வீடுகளை சூழ்ந்து இருப்பதால் மக்கள் வெளியே வரமுடியவில்லை. பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர படகுகள் விடப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
மூலக்கொத்தளம் சி.பி. ரோடு, ரெயில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாதவரம் மேம்பாலத்தில் இருந்து மூலக்கடை வரை உள்ள சாலையில் இடுப்பளவு தண்ணீர் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.