சென்னையிலும் 100 டிகிரியை தொட்ட வெயில்... கூடவே மக்களை அச்சுறுத்தும் அனல்காற்று!
சென்னையில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் உச்சத்தைத் தொட்டுள்ளது. அதோடு அனல் காற்றும் வீசி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.
சென்னை: சென்னையில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டுவிட்டது. ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்திலேயே வெயில் கொளுத்துவது மட்டுமில்லாமல் அனல் காற்று வீசி மக்களை மிகுந்த இன்னலுக்குள்ளாக்குகிறது. இன்னும் மூன்று மாதங்களை எப்படிக் கடத்துவது என்ற கவலையில் பொதுமக்கள் உள்ளனர்.
சென்னையில் வெயில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தொட்டுவிட்டது. அதோடு சேர்ந்து அனல் காற்று வீசி மக்களை வாட்டி வதைக்கிறது. பொதுவாக எப்ரல் மாதத்துக்கு பிறகே இப்படி அதிகப்படியான வெயில் வாட்டி வதைக்கும். ஆனால் இந்த வருடம் கொளுத்தோ கொளுத்து என்று கொளுத்திக் கொல்ல ஆரம்பித்துவிட்டது.
இதனால் பகல் பொழுதில் மக்கள் அதிகம் வெளியில் நடமாடுவது இல்லை. வெயிலின் தாக்கத்தை விட அனல் காற்றின் தாக்கம், உடலில் உள்ள அத்தனை நீரையும் உறிஞ்சி உடனே மயக்கமடையச் செய்வது போல் உள்ளது.
தப்பிக்குமா சென்னை?
சென்னையில், எப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்து வெப்பம் மற்ற மாவட்டங்களை விட குறைவாகத்தான் இருந்தது. ஆனால், தற்போது 'சென்னைவாசிகள் மட்டும் தப்பித்து விடுவீர்களா?' என்பது போல், வெயில் சுட்டெரிப்பதுடன் அனல் காற்று வீசி மக்களை துன்பப்படுத்துகிறது.
வர்தா காரணமா?
வர்தா புயலில் பல ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதனால் சென்னையின் பசுமை சூழல் குறைந்துள்ளது. வாட்டி எடுக்கும் வெயிலுக்கு வர்தாவும் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதர மாவட்டங்கள்
இதுவரை கரூர், வேலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் தான் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டையும் தாண்டி வெயில் மக்களை வதைத்தது. தற்போது சென்னையையும் வதைக்க ஆரம்பித்து விட்டது.
எச்சரிக்கை
இந்த அனல்காற்றிலும் வெயிலிலும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் அதிகம் வெளியே செல்லாமல் தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். இந்த அனல் காற்றிலும் வெளியே செல்கிறவர்கள் தலைக்கு தொப்பி அணிந்தோ, குடை பிடித்தோ செல்வது முக்கியம். அதைவிட முக்கியம் எங்கு சென்றாலும் கையில் தண்ணீர் வைத்திருங்கள்.