சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிப்பு... உஸ்மான் சாலை போக்குவரத்து எப்போது தொடங்கும்? - வீடியோ
தீ விபத்தில் சிக்கி உருக்குலைந்த சென்னை சில்க்ஸின் 7 மாடிக் கட்டடம் தற்போது இடிக்கப்பட்டு வருவதால், உஸ்மான் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இடிப்புப் பணி முடிந்ததும் போக்குவரத்து அனுமதிக்கப
சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடம் நெருப்புக்கு இரையானதைத் தொடர்ந்து இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கட்டடம் இடிக்கும் பணி முழுவதுமாக நிறைவடைந்த பிறகே உஸ்மான் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம், ஜூன் 1ஆம் தேதி அதிகாலையில் சென்னை சில்க்ஸ் கட்டடம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழந்தது. 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள், 150க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 27 மணிநேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
தீயில் பற்றி எரிந்ததால் கட்டடம் பலமிழந்துவிட்டதையடுத்து அதை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். சைதாப்பேடையில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தில் கட்டடம் இடிக்கும் பணியைக் கொடுத்தனர். அந்த நிறுவனம் தற்போது சென்னை சில்க்ஸின் 7 மாடிக் கட்டடத்தை இடித்து வருகிறது.
தற்போது கட்டடம் இடிக்கப்பட்டு வருவதால் கடந்த சிலநாட்களாக உஸ்மான் சாலை போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கட்டடம் இடிக்கும் பணி முழுவதுமாக நிறைவடைய நான்கு நாட்கள் ஆகும். அதன்பிறகே உஸ்மான் சாலையில் வழக்கம் போல்போக்குவரத்துக்கு அனுமதியளிக்க முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.