கைக்குழந்தையுடன் தேர்வு எழுதி கலக்கலாக வெற்றி – ஐ.ஏ.எஸ் தேர்வில் சென்னை பெண் தேர்ச்சி
சென்னை: சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் சென்று ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற 1122 பேரின் பெயர் பட்டியல் மத்திய தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது.
இதில் சென்னையைச் சேர்ந்த திவ்யா 82 ஆவது இடத்தில் தேறி சாதனை படைத்துள்ளார்.
விவசாயப் படிப்பு:
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் பட்டப்படிப்பு பயின்றவர் திவ்யா. இவரது கணவரும் கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி வருகின்றார்.
வனத்துறை அதிகாரி பணி:
கடந்த 2010 ஆம் ஆண்டில் இந்திய வனத்துறை பணி ஐ.எப்.எஸ் அதிகாரியாக தேர்வு பெற்ற திவ்யா கர்நாடகத்தில் 2012 ஆம் ஆண்டு உதவி வனப்பாதுகாவலராக பணியில் சேர்ந்து கடந்த ஜனவரி மாதம் கோட்ட வன அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
கர்ப்பிணியாகவே தேர்வு:
தற்போது மகப்பேறு விடுப்பில் இருக்கும் திவ்யா ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றது குறித்து, " ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பது எனது கனவாகும். கடந்த மே மாதம் இந்த தேர்வுக்கான முதல்நிலை தேர்வு நடந்த போது நான் 9 மாத கர்ப்பிணியாக இருந்தேன். அப்போது எனது தேர்வு மையம் கோவா ஆகும்.
கோவா பயணம்:
நான் கோவாவுக்கு பயணம் செய்து தேர்வு எழுத வேண்டாம் என்று எனது டாக்டர்கள் ஆலோசனை கூறியும் நான் அதை பொருட்படுத்தாமல் கோவா சென்று தேர்வு எழுதினேன்.
மெயின் தேர்வு:
ஜூலை மாதம் 4 ஆம் தேதி எனது மகன் அகிலேஷ் ராம் கார்த்திக் பிறந்தான். ஆகஸ்டு மாதம் முதல்நிலை தேர்வு முடிவு வெளியாகியது. டிசம்பர் மாதத்தில் மெயின் தேர்வு நடந்தது. நான் சென்னையில் தான் தேர்வு எழுதினேன்.
குழந்தையுடன் தேர்வு மையம்:
குழந்தை பிறந்த புதிது என்பதால் ஒரு மணி நேரம் தான் என்னால் தொடர்ந்து படிக்க முடிந்தது. மெயின் தேர்வு ஒரு வார காலம் நடந்தது. நான் என் குழந்தையை தேர்வு மையத்திற்கு கொண்டு செல்வேன். தேர்வு எழுதும் பொழுதெல்லாம் குழந்தை பசியாக இருப்பானே என்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
நேர்முகத் தேர்வு:
எனது பெற்றோரும் சென்னையில் இருந்ததால் அவர்கள் குழந்தையை நன்றாக கவனித்துக்கொண்டார்கள். 3 மணி நேரம் தேர்வு எழுதி முடித்துவிட்டு வெளியே வந்தவுடன் முதல் வேலையாக என் குழந்தையை கவனிப்பேன். இது போல டெல்லியில் நேர்முக தேர்வுக்கு சென்றபோதும் குழந்தையை எடுத்துக்கொண்டு தான் சென்றேன்.
பெற்றோர்க்கும், கணவருக்கும் நன்றி:
நான் தேர்வில் இந்த அளவுக்கு வெற்றி பெற்றதற்கு முழு காரணம் என் பெற்றோரும், என் கணவரும் தான். அவர்கள் எனக்கு துணையாக இருந்து உதவிகள் செய்ததால் தான் என்னால் கைக்குழந்தையையும் வைத்துக்கொண்டு தேர்வு எழுதி வெற்றி பெற முடிந்தது.
கடின உழைப்பு வெற்றி தரும்:
ஐ.ஏ.எஸ் அதிகரியாக ஆக வேண்டும் என்று விரும்பும் எல்லோருக்கும் நான் செல்வது பட்டப்படிப்பு படிக்கும் போதே இதற்கான ஆயத்த முயற்சிகளை தொடங்கிவிடுங்கள். குறைந்தபட்சம் ஒரு ஆண்டு காலம் கடினமான உழைப்பை மேற்கொண்டீர்கள் என்றால் நிச்சயமாக வெற்றி பெற முடியும்" என்று கூறியுள்ளார்.