சேத்துப்பட்டு ஏரி படகு சவாரி, பசுமைப் பூங்கா, அம்மா கைபேசி திட்டம்.. தொடங்கி வைத்தார் ஜெ.
சென்னை: சென்னையில் புதிய சுற்றுலாத்தலமாக சேத்துப்பட்டு ஏரியினை அறிவித்து பசுமைப் பூங்காவினையும், படகு சவாரியையும் இன்று முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
சென்னை மக்களின் முக்கிய பொழுதுபோக்கு மையமாக மெரினா கடற்கரை இருக்கிறது. ஆனால், படகு சவாரி செய்ய விரும்புபவர்கள், மாமல்லபுரம் அருகேயுள்ள முட்டுக்காடு சுற்றுலா தலத்திற்குத்தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

தற்போது படகு சவாரி வசதியும் சென்னை மாநகரின் மைய பகுதிக்குள்ளேயே வந்து விட்டது. 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சேத்துப்பட்டு ஏரியில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தூண்டில் மீன்பிடி தளம், 1.5 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி பாதை, மீன்கள் கண்காட்சி கூடம், குழந்தைகள் விளையாட்டு பூங்கா, அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடம், பெரிய ஹோட்டல் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தயார் நிலையில் உள்ள சேத்துப்பட்டு ஏரி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இந்த வசதிகள் இன்று திறந்து வைக்கப்பட்டவுடன் பொதுமக்கள் ஏரியில் படகு சவாரிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேத்துப்பட்டு ஏரிக்கு தெற்கு பகுதியில் சேத்துப்பட்டு ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதேபோல் வடக்கு பகுதியில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் பஸ் நிறுத்தம் உள்ளது. ஏரியில் படகு சவாரி செய்ய பெரியவர்களுக்கு ரூபாய் 50ம், சிறியவர்களுக்கு ரூபாய் 25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 15 கோடி ரூபாய் முதலீட்டில், 20,000 மகளிர் சுய உதவிக் குழு பயிற்றுனர்களுக்கு வழங்க இருக்கும் "அம்மா கைபேசி" திட்டத்தினையும் முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு அலுவலர் குடியிருப்புகள்:
மேலும், சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 100 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6.42 ஏக்கர் நிலத்தில், 6,57,020 சதுர அடி கட்டிட பரப்பளவில் கட்டப்பட்டுள்ள அரசு அலுவலர்களுக்கான "சி-வகை" 700 குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications