உங்க வேட்டி, சேலை எங்களுக்கு எதுக்கு..சசி குரூப் ஜெ.பிறந்தநாளை புறக்கணித்த செய்யாறு மக்கள்
சசிகலா ஆதரவு எம்எல்ஏ மோகன் கொடுத்த வேட்டி, சேலையை செய்யாறு தொகுதி மக்கள் புறக்கணித்தனர். அவர் நடத்திய ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் ஒருவரும் கலந்து கொள்ளவில்லை.
செய்யாறு: இன்று மறைந்த ஜெயலலிதாவின் 69வது பிறந்த தினம். தமிழகம் முழுவதும் சசிகலா அணியினரும், ஓபிஎஸ் அணியினரும் தனித்தனியாக பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் செய்யாறு தொகுதியின் எம்எல்ஏவான தூசி மோகன் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். மேலும், வேட்டி, சேலை வழங்குவது போன்ற நலத்திட்டங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டிருந்தார்.
காலையில் ஜெயலலிதாவின் உருவப் படம் வைக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செய்த பின்னர், தொகுதி மக்களுக்காக வைக்கப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொள்ளுமாறு ஒலிப் பெருக்கியில் அழைப்பு விடுத்தார்.
புறக்கணிப்பு
அவரது அழைப்பை தொகுதி மக்கள் ஏற்கவில்லை. ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் பங்கேற்கவில்லை. ஒருவர் கூட அவர் கொடுத்த வேட்டி, சேலைகளை வாங்க வரவில்லை.
அவமானம்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்ரமணியம் வேட்டி, சேலைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டார். தொகுதி எம்எல்ஏவையே சட்டை செய்யாத மக்கள், முன்னாள் அமைச்சர் கொடுக்கும் வேட்டி, சேலையையா வாங்குவார்கள்? அப்போதும் ஒருவரும் நலத் திட்ட உதவிகளைப் பெற முன்வரவில்லை.
சொதப்பல்
ஜெயலலிதாவின் பிறந்த நாளைக் கொண்டாடி நலத்திட்டங்களை வழங்குவதன் மூலம் தொகுதி மக்களிடையே நல்ல பெயரை வாங்கி விடலாம் என்று எதிர்ப்பார்த்த எம்எல்ஏ மோகனுக்கு அவமானம் மட்டும்தான் மிஞ்சியது.
மரியாதை இல்லை
அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு ஆதரவளித்து வரும் மோகனுக்கு ஏற்கனவே தொகுதியில் மரியாதை இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்து விட்டு தொகுதிக்கு வந்த போது வாக்காளர்கள் பெரிய அளவில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.