காலியாகும் சிதம்பரம் கூடாரம்.. வாசன் கட்சியில் இணைந்த சிவகங்கை காங்கிரசார்!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தொடங்க உள்ள கட்சியில் சிவகங்கையை சேர்ந்த ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன் தனிக் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். திருச்சியில் வரும் 28-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்பட இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் நாள்தோறும் ஜி.கே.வாசனை சந்தித்து கட்சி தாவி வருகின்றனர். இந்த பட்டியலில் தற்போது ஜி.கே.வாசனின் பரம எதிரியான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் நேற்று சென்னையில் வாசன் கட்சியில் இணைந்தனர். சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த சிவகங்கை மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி தலைவர் மாங்குடி, முன்னாள் மாவட்ட செயலாளர் துரை கருணாநிதி, காரைக்குடி நகர செயலாளர் குமரேசன், முன்னாள் மாவட்ட பொது செயலாளர்கள் அழகேசன், சார்லஸ் உட்பட 100 க்கும் மேற்பட்டவர்கள் வாசனை சந்த்இருந்தனர். நேற்று காங்கிரசை சேர்ந்த 100 பேர் சென்னையில் வாசனை சந்தித்து அவரது கட்சியில் இணைந்தனர்.
இது குறித்து சங்கராபுரம் ஊராட்சி தலைவர் மாங்குடி கூறுகையில், காங்கிரசை பொறுத்தவரையில் நாளுக்கு நாள் கோஷ்டிகள் உருவாகின்றன. கட்சியினரின் குறையை யாரிடம் போய் சொல்வது என்றே தெரியவில்லை. ப.சிதம்பரம் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளோம். ஆனால் சில காரணங்களால் அவரை நெருங்க முடியவில்லை. நான் மட்டும் அவரை பார்ப்பதை விட ஆதரவாளர்களுக்கு எதுவும் செய்ய முடிவதில்லை. இதனால் புதிதாக ஏற்பட்டுள்ள வாசன் தலைமையிலான கட்சியில் சேர முடிவு செய்தோம் என்றார்..












Click it and Unblock the Notifications