காங். நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் குஷ்புவுக்கு அடுத்த இடம் தான் ப.சிதம்பரத்துக்கு!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நடிகை குஷ்புவுக்கு அடுத்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஒருவர் ப.சிதம்பரம். பொருளாதார மேதை, சட்ட மேதை என பாராட்டப்படுகிறவர்.
காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி அடைந்து தனிக்கட்சியெல்லாம் நடத்தியவர். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிதி அமைச்சராக, உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர். ஆனால் அண்மைகாலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுங்கிய நிலையில் இருந்துவருகிறார்.

ஒதுக்கப்பட்ட சிதம்பரம்..
இதனை அவரது எதிர்ப்பாளர்களான இளங்கோவன், தங்கபாலு கோஷ்டி லாவகமாக பயன்படுத்தி கொண்டு வருகிறது. தற்போதைய சட்டசபை தேர்தலில் கூட ப.சிதம்பரம் தமது ஆதரவாளர்களுக்கான தொகுதிகளை பெற முடியாத அளவுக்கு ஒதுக்கிவைக்கப்பட்டார். டெல்லியில் நடைபெற்ற பஞ்சாயத்தில் பெரும் போராட்டமே நடத்தி தம்முடைய ஆதரவாளர் கராத்தே தியாகராஜனுக்காக மயிலாப்பூர் தொகுதியை பெறவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார் ப.சிதம்பரம். இதில் கடுமையான அதிருப்தியில் அவரது ஆதரவாளர்கள் இருந்து வருகின்றனர்.

40 பேர் பட்டியல்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டசபை தேர்தலுக்கான 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலைப் பார்த்த ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.

குஷ்புவுக்கு அடுத்து...
இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் பெயர் முதலில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் நடிகையும் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்புவின் பெயர் உள்ளது. 3-வது இடத்தில்தான் சிதம்பரத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.
மேலும் தங்கபாலு, மணிசங்கர் அய்யர், கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, முகுல்வாஸ்னிக், சித்தராமையா, சுசில்குமார் ஷிண்டே, ஆஸ்கார் பெர்னாண்டஸ், சல்மான் குர்ஷித் ஆகியோரது பெயர்களும் இப்பட்டியலில் உள்ளது.

அதிருப்தி
குஷ்புவுக்கு அடுத்து சிதம்பரம் பெயர் இடம்பெற்றிருப்பதை ஜீரணிக்க முடியாதவர்களாக ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் இருக்கின்றனர். கட்சிக்கு நேற்று வந்த குஷ்புவுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? இத்தனை ஆண்டுகாலம் இந்திய அளவில், உலக அளவில் காங்கிரஸுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் தரும் மரியாதை இதுதானா? என்றெல்லாம் அவரது ஆதரவாளர்கள் கொதித்து போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications