சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா விடுவிப்பு!
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்கும்வரை அவரே பதவியில் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சந்தீப், 1989ல் தமிழழக பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியில் இணைந்தார். பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், 2011ம் ஆண்டு, நவம்பர் முதல், வேளாண்மை துறை முதன்மை துறை செயலாளராக பணியாற்றி வந்தார். இதன்பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி, தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

சந்தீப் சக்சேனா பொறுப்பேற்ற பிறகு வெளியான வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டிருந்ததாக சர்ச்சைகள் எழுந்தன. மேலும் ஸ்ரீரங்கம் மற்றும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்களில் சக்சேனா, ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்துகொண்டதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பின.
இந்நிலையில், சந்தீப் சக்சேனா தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமையே மத்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து இதற்கான உத்தரவு வந்ததாகவும், அது வெளிப்படையாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் தமிழக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.
புதிய அதிகாரி நியமிக்கப்படும்வரை சந்தீப் சக்சேனாவே தமிழக தேர்தல் அதிகாரியாக தொடருவாராம். பதவிக்கு வந்து சரியாக ஓராண்டுக்குள், அந்த பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, புதிய அதிகாரியை தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஒருவர் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications