முதல்வர் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர், ஆசிரியர் ஒருநாள் சம்பளம் வழங்குவது எப்படி?: அரசாணை வெளியீடு
சென்னை: வெள்ள பாதிப்புகளுக்காக முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர், ஆசிரியர் ஒரு நாள் ஊதியம் வழங்குவது தொடர்பாக சில வழிமுறைகளை வகுத்து, தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் அரசாணை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது;-
முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களது ஒரு நாள் சம்பளத்தை தன்னார்வத்தோடு அளிக்கும் அரசு ஊழியர், சம்பளம் வழங்கும் அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக விருப்பத்தை தெரிவிக்க வேண்டும். அவர் இந்த மாத சம்பளத்தை 31 ஆல் வகுத்து, அதை ஒரு நாள் ஊதியமாகக் கணக்கிடுவார்.

ஒரு நாள் சம்பளத்துக்கான காசோலையை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி என்று எடுப்பதோடு, ஊழியரின் பெயர், பதவி போன்ற விபரங்களைக் கொண்ட பட்டியலை சம்பந்தப்பட்ட அலுவலர் தயார் செய்ய வேண்டும்.
நிவாரணமாக அளிக்கப்படும் தொகைக்கு வருமான வரியில் இருந்து 100 சதவீத விலக்கு உண்டு. சம்பளத்தைத் தாண்டி தனிப்பட்ட முறையில் நிதி அளிப்பவர்களுக்கு ரசீது வழங்கப்படும். இதிலும் வரிச்சலுகை உண்டு. ஒரு நாளைக்கு கூடுதலாகவும் நிதி அளிக்கலாம்.
உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், அரசிடம் இருந்து மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், தொகுப்பூதியம் பெறுவோருக்கு இந்த அரசாணை பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications