பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்கள்... “சைல்டு லைன்” விசாரணை
தருமபுரி: தருமபுரியில் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களிடம் "சைல்டு லைன்" அமைப்பினர் விசாரணை நடத்தினர்.
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் திருலோகசந்திரன், சசிகுமார் ஆகியோர் அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாக புகார் எழுந்துள்ளது.
மேலும், இந்த ஆசிரியர்கள் தங்களின் மொபைல் ஃபோன் மூலம் ஆபாச காட்சிகளை மாணவியருக்கு காட்டி வருவதாக சம்பந்தப்பட்ட மாணவியர்கள் அவர்களது பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர்.
தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கல்யாணசுந்தரம், சைல்டு லைன் இயக்குனர் சைன்தாமஸ், கட்டாய கல்வி உரிமை ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா ஆகியோர் தொப்பூர் பள்ளி ஆசிரியர்கள் திருலோகசந்திரன், சசிகுமார் மற்றும் மாணவியர்களிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், சில மாணவியர்களுக்கு ஆசிரியர்கள் இருவரும் பாலியல் தொந்தரவு கொடுத்தது மற்றும் மொபைல் ஃபோனில் ஆபாச படம் காட்டியது உண்மையென தெரியவந்தது. இதையடுத்து, இக்குழுவினர் தங்களது விசாரணை அறிக்கையை கலெக்டர் விவேகானந்தனிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.