சென்னை: குழந்தைகள் காப்பகத்திற்கு சீல்: 33 குழந்தைகள் மீட்பு
சென்னை: சென்னையில் முறையான அனுமதியின்றி இயங்கி வந்த குழந்தைகள் காப்பகத்தை அதிகாரி மூடி சீல் வைத்தனர்.
சென்னை மேடவாக்கம் பகுதியில் நியூ ஹோப் ஆஃப் லைஃப் என்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்தக் காப்பகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இட வசதி, உணவு, பாதுகாப்பு, பராமரிப்பு, கழிப்பிட உள்ளிட்டவை இல்லாமல் 33 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மாவட்ட குழந்தைகள் நல குழுமம், சமூக நல அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
புகார்களில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் உண்மை என்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த 33 குழந்தைகளும் மீட்கப்பட்டு, அரசு அனுமதியுடன் இயங்கி வரும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
பொள்ளாச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன் அடிப்படை வசதியின்றி செயல்பட்டு வந்த காப்பகத்தில் தங்கியிருந்த பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள காப்பகங்கள் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு அடிப்படை வசதியற்ற காப்பகங்களை அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications