எம்எல்ஏவை காணவில்லை என புகார் அளிக்க சென்றவரை போலீஸ் மிரட்டியதால் பரபரப்பு
சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவை காணவில்லை என புகார் அளிக்கச் சென்றவரை போலீசார் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம்: சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவை காணவில்லை என புகார் அளிக்கச் சென்ற அதிமுக பேச்சாளரை போலீசார் மிரட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று புகார் அளித்தால் பொய் வழக்கில் கைது செய்து விடுவோம் என காவல்துறை ஆய்வாளர் மிரட்டியதாக அதிமுக பேச்சாளர் ஜெயவேல் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் பலர் சசிகலாவின் கட்டுப்பாட்டில் கூவத்தூர் ரிசார்ட்டில் இன்று 7வது நாளகாக அடைக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரமாக தொகுதி பக்கமே தலைக்காட்டாததால் பணிகள் முடங்கியுள்ளன.
அவரது செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பொதுமக்கள் தங்கள் தொகுதி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களை காணவில்லை என அந்தந்த தொகுதி மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிதம்பரம் தொகுதி அதிமுக எம்எல்ஏவான பாண்டியனை காணவில்லை என அக்கட்சியின் பேச்சாளர் ஜெயவேல் தலைமையில் பொதுமக்கள் புகார் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கச்சென்றார். அப்போது புகாரை வாங்க மறுத்த நகர காவல் ஆய்வாளர், இதுபோன்று புகார் அளித்தால் பொய் வழ்க்கில் கைது செய்வேன் என மிரட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பொதுமக்கள் போலீசார் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர். தாங்கள் அளிக்கும் புகாரை போலீசார் வாங்க மறுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.