சசிகலாவுக்கு எப்போதுமே ஆகாத சோ... ஆனாலும் அஞ்சலி செலுத்திய சசி
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கும் பத்திரிகையாளர் சோவிற்கும் ஏழாம் பொருத்தம்தான் எப்போதும் முட்டல் மோதல்தான் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்
பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோ தமிழக் முதல்வரின் அரசியல் ஆலோசகராக இருந்தார். 2011 சட்டசபை தேர்தலின் போது விஜயகாந்தை ஜெயலலிதா உடன் கூட்டணி அமைப்பதற்காக பேசியது சோ தான் என்பது தமிழக அரசியலை உற்று நோக்கியவர்கள் உணர்ந்த உண்மை.
2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான ஜெயலலிதா தனது வீட்டில் இருந்த உயிர் தோழி சசிகலா மற்றும் மன்னார்குடி கும்பலை அதிரடியாக நீக்கினார். இந்த பின்னணியில் சோ பங்கு இருந்ததாக அப்போதே பேசப்பட்டது.
ஜெயலலிதாவிற்கு அரசியல் ஆலோசகராகவும் நண்பராகவும் இருந்தார் சோ. அதே நேரத்தில் ஜெயலலிதாவின் உயிர்தோழி சசிகலாவிற்கு எப்போதும் அவர் ஆகாதவர் என்றே கூறப்பட்டது.
ஜெயலலிதா எந்த நேரத்திலும் சசிகலாவை விட்டுக்கொடுத்ததில்லை. 2011ம் ஆண்டு சசிகலா வெளியேற்றப்பட்டது கூட அரசியல் நாடகம் இருக்கலாமோ என்று பேசப்பட்டது.
இதனையடுத்து சோ, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகிய இருவரும் 9 நிறுவனங்களுக்கும் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டனர். சில மாதங்களுக்குப் பின்னர் சசிகலா மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்த பின்னர் சோ நவம்பர் 2012ல் இயக்குனர் பதவியிலிருந்து விலகினார்.
போயஸ் தோட்டத்து வீட்டில் இருந்து தான் வெளியேற்றப்பட காரணம் சோ தான் என்று நம்பினார் சசிகலா. இதன் பின்னர் சசிகலாவிற்கு சோ உடனான இடைவெளி அதிகரித்தது.
இந்த நிலையில் இன்று உடல்நலக்குறைவால் காலமாகியுள்ள சோ ராமசாமியின் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிர்தோழியின் அரசியல் ஆலோசகர், நண்பர் என்கிற முறையில் சசிகலா வந்து அஞ்சலி செலுத்தியிருக்கலாம் என்று பேசப்படுகிறது.