நெல்லையில் டிரைவர் அலட்சியம்- பள்ளி வேனுக்குள் மாட்டிய சிறுவன்- 4 மணிநேர பதற்றத்துக்குப் பின் மீட்பு
திருநெல்வேலி: நெல்லை அருகே மாணவனை வேனில் இருந்து இறங்காததை கவனிக்காத ஓட்டுனர் கதவை பூட்டிச் சென்றதால் உள்ளே மாட்டிக்கொண்ட சிறுவன் 4 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டான்.
திருநெல்வேலி கடையம் அருகே உள்ள மேட்டூரைச் சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மனைவி பிரேமா. இவர்களுடைய மகன் பிளசன் பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறான்.

வழக்கமாக பள்ளிக்கு வேனில் அழைத்துச் செல்லப்பட்டு 3.30 மணி அளவில் மீண்டும் வீட்டில் கொண்டுவந்து இறக்கிவிடப்படும் சிறுவன் நேற்று வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. ஒருவேளை பள்ளியில் ஏதேனும் நிகழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்த பிரேமா சிறுவனை தேடவில்லை. மாலை 6 மணி ஆகியும் சிறுவன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளியைத் தொடர்பு கொண்டு கேட்டனர்.
அதற்கு, சிறுவன் பள்ளியிலிருந்து மதியம் 3 மணிக்கே கிளம்பி விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் பதறிப்போன சிறுவனின் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர். சிறுவன் கிடைக்கததையடுத்து அவரது தாய் பிரேமா அழுது புலம்பினார். ஓட்டுனருக்கு தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவரது எண்ணும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அவரகளது சந்தேகம் மேலும் வலுத்தது.
இந்நிலையில், ஆசிரியர் ஒருவர் சிறுவன் பிளசன் சென்ற வேனைத் திருந்து தேடினார். அப்போது பிளசன் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான். இதையடுத்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்து சிறுவனை அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து ஓட்டுனரிடம் கேட்டபோது, பிளசன் வழக்கமாக இறங்கும் இடத்தில் தான் வண்டியை நிறுத்தியதாகவும், பிளசன் இறங்கிவிட்டதாக நினைத்து வண்டியை திருப்பி பள்ளிக்கு எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் கவனமாக இருக்கும்படி ஆசிரியர்கள் எச்சரித்தனர்.












Click it and Unblock the Notifications