சினிமா வியாபாரம் என்றால் வரிகளுக்கு எதிராக ஏன் வாதிடவேண்டும்? லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி
சென்னை: சினிமா வெறும் வியாபாரம் என்றால் ஏன் வரிகளுக்கு எதிராக வாதிடவேண்டும்? என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்கும் வகையில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என பல்வேறு தரப்பினரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முதன்மையானதாக திகழும் தியேட்டர்களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தமிழக அரசு கேளிக்கை வரியாக 30 சதவீதம் வரி விதித்துள்ளது. இதனால் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் 58 சதவீதம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தில் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் மூன்றாவது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
If Cinema is treated as pure Business, where is the question of arguing against taxes? Make big money, pay huge salaries & ask for waivers?
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) July 5, 2017
வரி விதிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து திரைத்துறையினர் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சினிமா வெறும் வியாபாரம் மட்டுமே என்றால் ஏன் வரிகளுக்கு எதிராக வாதிடவேண்டும்? அதிகமாக பணம் சம்பாதித்து, அளவுக்கு அதிகமாக சம்பளம் கொடுத்துவிட்டு, வரி விலக்கு வேறு கேட்க வேண்டுமா?
100 கோடி க்ளப் என்று கூறி, கோடிகளில் வசூல் என விளம்பரம் செய்துவிட்டு, நட்சத்திரங்கள் சம்பளங்களை ஏற்றிவிட்டு உதவிக்காக அழுவது ஏன்? சினிமாவை காப்பாற்றவா? மேலும், சினிமாவை கலையாய் எண்ணி படம் எடுப்பவர்களுக்கு மட்டும் வரி விலக்கு கொடுங்கள், வியாபார படங்களுக்கு வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.