நெல்லையில் ஒரே மாதத்தில் 16வது கொலை- சிஐடியூ நிர்வாகி படுகொலையால் பதற்றம்!!
நெல்லை: திருநெல்வேலி அருகே அபிஷேகப்பட்டியில் சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொலையாளியை கண்டுபிடிக்க கோரி நெல்லை மாவட்டத்தில் சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி அருகே ரெட்டியார்பட்டி திருமால்நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கோபி (38). ஆட்டோ ஓட்டுநர். சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவராகவும் இருந்து வந்தார்.
திருநெல்வேலி சந்திப்பில் கோபியை சந்தித்த சிலர் ஆலங்குளத்துக்கு செல்ல வேண்டும் எனத் தெரிவித்து ஆட்டோவில் சென்றனராம். திருநெல்வேலி அருகே பழையபேட்டை அபிஷேகபட்டிக்கு வந்ததும் ஆட்டோவில் பயணம் செய்தவர்கள் கோபியை அங்குள்ள நெடுங்குளத்திற்கு அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பினர். இதில், பலத்த காயமடைந்த கோபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கோபியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கோபிக்கு கோமதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநர் கோபி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி. பாஸ்கரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோபி தான் வாங்கிய கடனுக்கு தொடர்ந்து பணம் செலுத்தி வந்த நிலையில் அதிக வட்டி கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து அவர் தாக்கப்பட்டதாக சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பத்தமடையில் கோபியை கொலை செய்ய முயன்றது குறித்தும் புகார் செய்யப்பட்டது. எனினும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றார்.
இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் கோபியின் கொலையைக் கண்டித்து இன்று திருநெல்வேலி, சங்கரன்கோவில், தென்காசி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பதற்றம் ஏற்பட்டது.
தொடர் கொலைகளால் பதற்றம்
நெல்லையில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் இதுவரை 16 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தொடர்கொலைகளால் சம்பவம் சாதாரண பொதுமக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர்.
நெல்லை வீரவநல்லூர் பகுதியில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி சுரேஷ் (30) என்ற இளைஞர் கும்பல் ஒன்றால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதே போல், சமீபத்தில் பர்கிட் மாநகரத்தைச் சேர்ந்த மகேஷ், மேல பாட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டனர்.
கடந்த 15 தினங்களுக்கு முன்பு நாங்குனேரியில் இரண்டு பேர் வெட்டிக்கொல்லப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஆட்டோ டிரைவர் ஒருவர் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். பழிக்குப் பழி வாங்கும் கொலைகள் நெல்லையில் அதிகரித்து வருவதால் மக்களிடையே அச்ச உணர்வு அதிகரித்து வருகிறது.