ரேஷன் கடைகளில் மக்களுக்குத் தேவையான பொருட்கள் இல்லை - ஓபிஎஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் தேவையான பொருட்கள் கிடைப்பதில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காதது கண்டு மனம் வேதனையடைகிறது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை என கூறி திமுக இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியது. திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நடத்திய இப் போராட்டம் தேவையற்றது என முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறியுள்ளார்.
ஆனால் திமுகவினரின் போராட்டத்தை ஆதரிப்பது போல ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ரேஷன் பொருட்கள் சரியாக கிடைக்காமல் இருப்பது கண்டு மனம் வேதனையடைகிறது என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும், பொதுவிநியோகத் துறை மக்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் அரசு காலதாமதம் செய்த காரணத்தால் தான் இந்த நிலை உருவாகியுள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.