முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு வழக்கு தலைமை நீதிபதிக்கு திடீர் மாற்றம்
மதுரை: முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை பெஞ்சுக்கு மாற்றியுள்ளது மதுரை உயர்நீதிமன்றக் கிளை. இதனால் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பழ. நெடுமாறன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது...
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் பலியான ஒரு லட்சத்து 50 ஆயிரம் அப்பாவி தமிழர்களின் நினைவாக தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் கடந்த நவம்பர் 6 ஆம் தேதி திறக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நினைவு கட்டிடம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும், பஞ்சாயத்து தெரு, நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், எனவே முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டுவதற்கு வழங்கப்பட்ட கட்டட அனுமதியை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று விளக்கம் கேட்டு விளார் பஞ்சாயத்து தலைவர் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி எங்கள் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீஸுக்கு இடைக்கால விளக்கம் எங்கள் அறக்கட்டளை சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த நவம்பர் 13 ஆம் தேதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீஸ் துணையுடன் எந்த முன்னறிவிப்பு இன்றி முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர், செயற்கை நீர்வீழ்ச்சி, அலங்கார விளக்குகள், நினைவு இடத்தின் பெயர் பலகை ஆகிவற்றை இடித்து தள்ளிவிட்டனர்.
அங்கிருந்த மரங்கள், செடிகளையும் அகற்றிவிட்டனர். எனவே, இதேபோல இரவு நேரத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டிடத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து, அதிகாரிகள் இடித்து தள்ளிவிடுவார்கள் என்ற அச்சமும் எங்களுக்கு உள்ளது.
எனவே 14.11.2013 அன்று எங்களுக்கு வழங்கிய விளக்க நோட்டீசை ரத்து செய்யவேண்டும். முள்ளிவாய்க்கால் முற்றம் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் சசிதரன், அக்னிஹோத்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் இந்த வழக்கை அவர்கள் தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால் தலைமையிலான பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டனர். இந்த வழக்கோடு முள்ளிவாய்க்கால் முற்றம் தொடர்பான இதர வழக்குகளும் சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி வசம் இந்த வழக்குப் போயிருப்பதால் பரபரப்பு சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications