அமெரிக்க கப்பல் ஊழியர்களின் ஜாமீனுக்கு இடைக்கால தடை
தூத்துக்குடி: அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 35 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் 'அட்வன் போர்டு' என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 'சீ மேன் கார்டு' எனும் பாதுகாப்பு கப்பல் இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அனுமதியின்றி நுழைந்ததாக கடந்த அக்டோபர் மாதம் 12ஆம் தேதி தூத்துக்குடி அருகே பிடிபட்டது. அந்த கப்பலில் இருந்த 10 மாலுமிகள், 25 பாதுகாவலர்களை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 35 பேர்களில் 23 பேர் சென்னை புழல் சிறையிலும், 12 பேர் பாளையங்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கப்பல் ஊழியர்கள் 35 பேரையும் ஜாமீனில் விடுவிக்கக்கோரி கப்பல் நிறுவனம் சார்பில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், 35 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இதையடுத்து, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, கியூ பிரிவு போலீசார் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 35 பேருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், கியூ பிரிவு போலீசாரின் மனு மீது மறு உத்தரவு வரும் வரை இடைக்கால தடை செல்லும் எனக்கூறிய அவர், மறு விசாரணையை ஜனவரி மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் கூறி தீர்ப்பளித்தார்.