அரசு பஸ்களை ஓட்ட முயன்ற அதிமுகவினர்.. தடுத்த போக்குவரத்து ஊழியர்கள்.. 4 டிரைவர்கள் படுகாயம்!
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஆளும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது எனக் கூறி பேருந்தை இயக்க முயன்ற அதிமுகவினருக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் காயமடைந்த 4 ஓட்டுநர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அண்ணா தொழிற்சங்கத்தினரைத் தவிர மற்ற அனைத்துப் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் ஒருமித்த கருத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நேற்று முதல் தமிழகத்தில் பெரும்பாலான பேருந்துகள் ஓடவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப் பட்டு வருகின்றன.

இதன்படி, கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, நன்னிலம், பொறையார், சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், நாகப்பட்டினம், மன்னார்குடி, திருவையாறு உள்ளிட்ட டெப்போக்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப் பட்டு வருகின்றன.
நாகப்பட்டினம் டெப்போவில் வழக்கமாக இயக்கப்படும் 72 பேருந்துகளில், இன்று 29 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேபோல், மயிலாடுதுறை டெப்போவில் வழக்கமாக 81 பேருந்துகள் இயங்கும். அதில் இன்று 22 பேருந்துகள் மட்டுமே ஓடுகின்றன. மீதி உள்ள பேருந்துகள் அனைத்தும் ஆங்காங்கே நிற்க வைக்கப் பட்டுள்ளன.
சீர்காழி கிளையில் இயக்கப்படும் மொத்தம் 45 பேருந்துகளில், 19 பேருந்துகளும், பொறையார் கிளையில் 29 பேருந்துகளுக்கு பதிலாக 7 பேருந்துகளும், திருத்துறைப்பூண்டி டெப்போவில் 63 பேருந்துகளுக்குப் பதிலாக 21 பேருந்துகளும் இயக்கப் பட்டு வருகின்றன. வழக்கமாக மன்னார்குடி டெப்போவில் இருந்து 67 பேருந்துகள் இயங்கும். இன்றோ 27 பேருந்துகள் மட்டுமேஇயங்குகின்றன.
இப்பேருந்துகளையிம் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சிலரும், புதிதாக பணியில் சேர்க்கப் பட்ட ஓட்டுநர்களுமே இயக்குவதாகக் கூறப்படுகிறது. அண்ணா தொழிற்சங்கத்தினர் சிலர் இந்தப் போராட்டத்திற்கு உடல்நிலைச் சரியில்லை என்றும், விசேஷங்களுக்குச் செல்கிறோம் என்றும் காரணங்களைக் காட்டி பேருந்து இயக்க வராமல் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வேதாரண்யத்தில் போராட்டம் குறித்து அனைத்துத் தொழிற்சங்கத்தினரும் ஓய்வு அறையில் அதிகாரப்பூர்வமற்ற நிலையில் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனால், பேருந்துகள் இயக்கம் முற்றிலும் தடை பட்டது.
இதனால், ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் எனக் கருதிய அதிமுகவினர் சிலர் பேருந்துகளை இயக்க முயற்சித்துள்ளனர். இதனால், போக்குவரத்து ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது. இதில், நடராஜன், அழகேசன் உள்ளிட்ட நான்கு ஓட்டுநர்களுக்கு காயம் ஏற்பட்டு, அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications