ஓடும் பேருந்தில் பச்சையப்பன், மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்: 2 பேருக்கு அரிவாள் வெட்டு
சென்னை: செங்குன்றத்தில் ஓடும் பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் இரண்டு மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
செங்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் புதழ்கிழமை காலை செங்குன்றம் பேருந்து நிறுத்தத்தில் மாநகர பேருந்தில் பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறினர். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சிலர் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் முன்விரோதம் காரணமாக பேருந்தில் பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதற்கிடையே பேருந்து நிறுத்தம் வந்ததும் டிரைவர் வாகனத்தை நிறுத்தினார்.
உடனே மாணவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி ஆகியவற்றை எடுத்து ஒருவரையொருவர் தாக்கினர். இதில் பச்சையப்பன் கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு படிக்கும் செங்குன்றத்தைச் சேர்ந்த மணிகண்டன்(19) என்பவருக்கு தலை, முதுகில் அரிவாள் வெட்டு பட்டு அவர் பேருந்திலேயே மயங்கி விழுந்தார்.
பிற மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். அப்போது சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் பி.ஏ. 2ம் ஆண்டு படிக்கும் அஜீத்(20) என்பவர் கடைத் தெருவில் உள்ள கடை ஒன்றுக்குள் ஓடினார். அவர் எதிரணியைச் சேர்ந்நதவராக இருப்பார் என நினைத்து மாணவர்கள் அவரை வெட்டினர். முகம், தலை, கழுத்து ஆகிய பகுதிகளில் அரிவாள் வெட்டு பட்ட அஜீத் அங்கேயே மயங்கினார். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 5 மாணவர்களை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். மேலும் 10 மாணவர்களை வலைவீசித் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications