விருதுநகர் அருகே இரு பிரிவினரிடையே மோதல்..தீ வைப்பு சம்பவங்களால் பதற்றம்!
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலின் போது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள தொட்டிய பட்டியில் தண்ணீர் பிடிப்பதில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 5 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது.
மேலும் இரு சக்கர வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் ஆய்வாளர் மகேஸ்குமார் தலைமையில் அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் பார்வையிட்டார். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் எடுப்பதில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.