அடுத்த வாரம் நாகையில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதில் சிக்கல்? அதே இடத்தில் அதே நாளில் திமுக கூட்டம்!
நாகப்பட்டினம்: நாகையில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டுள்ள அதே நாளில் அதே இடத்தில் திமுகவினரும் கூட்டம் நடத்துவதற்கு முன்பதிவு செய்துள்ளதால், வேறு இடத்தில் அனுமதி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை வேகப்படுத்தி வருகின்றன. முதல் முறையாக தேர்தல் களத்தைச் சந்திக்கும் தவெகவும் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறது.

விஜய் பிரச்சாரம்
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை நேற்று தொடங்கினார். திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நேற்று பரப்புரையில் ஈடுபட்டார். விஜய் டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.
திருச்சி மரக்கடை பகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று பிரச்சாரம் செய்தார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த அவரை வரவேற்க கூடியிருந்த தொண்டர்கள் ஆர்வமிகுதியில் பாதுகாப்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஓடி வந்தனர். விஜய்யின் பிரச்சார வாகனம் புறப்பட்டதும், அவரது வாகனத்துக்கு முன்பும், பின்பும் ஏராளமான வாகனங்கள் பின் தொடர்ந்து சென்றன.
விஜய் வருகைக்கு காத்திருப்பு
மேலும், அவரது வாகனத்தை ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டதால், விமான நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பிரச்சார இடமான மரக்கடை செல்ல சுமார் 5 மணி நேரம் ஆனது. இந்த கூட்டத்தில் குழந்தைகளுடன் பெண்கள், சிறுவர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காத்திருந்தவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாததாலும், 10 மணிக்கு மேல் வெயில் கடுமையாக இருந்ததாலும் 15 பேர் மயக்கமடைந்தனர்.
நாகையில் விஜய் பிரச்சாரம்
தவெக தலைவர் விஜய் அடுத்த வாரம் சனிக்கிழமை (செப்டம்பர் 20 ஆம் தேதி) நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். நாகை அவுரி திடலில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள தவெக தரப்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், தவெக அனுமதி கேட்ட அதே நாளில் திமுகவினர் கூட்டம் நடத்த ஏற்கனவே பதிவு செய்துள்ளதால் போலீசார் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியானது.
நாகை அவுரி திடலில் செப்டம்பர் 20 ஆம் தேதி திமுகவினர் கூட்டம் நடத்துவதற்கு நகராட்சி அலுவலகத்தில் முன்பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, 7 இடங்களைக் குறிப்பிட்டு தவெக மாவட்டச் செயலாளர் சுகுமாரன் அனுமதி கோரியிருந்தார். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
வேறு இடத்தில்
ஆனால், நாகையில் தவெக கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மாவட்ட எஸ்.பி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. செல்வகுமார் கூறுகையில், 20 ஆம் தேதி நாகையில் நடைபெறும் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக்கு மாற்று இடம்கோரி 7 இடங்களை தவெகவினர் முன்வைத்துள்ளனர். அந்த மனு பரிசீலனையில் உள்ளது. போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுமா? பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுமா என்பதை எல்லாம் கருத்தில்கொண்டு ஆய்வு செய்து அனுமதி தரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications