"நீ எனக்கு மட்டும்தான்னு சொன்னேன், கேக்கலை.. அவன் வேற உள்ளே இருந்தான்.. கொன்னுட்டேன்..!
தென்காசி: நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே ஒரு பெண்ணின் இரு கள்ளக்காதலர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் தான் கொலை செய்தது ஏன் என்று கைதான கள்ளக்காதலன் போலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
புளிச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவரது வீட்டின் முன்பு ஆனந்த் என்ற 41 வயது ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தியபோது கொல்லப்பட்ட நபர் கிருஷ்ணவேணியின் கள்ளக்காதலன் என்று தெரிய வந்தது. அவரைக் கொலை செய்தது கிருஷ்ணவேணியின் இன்னொரு கள்ளக்காதலரான அசோகன் என்றும் தெரிய வந்தது.
அதாவது ஒரே நேரத்தில் இரு கள்ளக்காதலர்களுடன் வாழ்ந்து வந்துள்ளார் கிருஷ்ணவேணி. இதை அசோகன் விரும்பவில்லை. ஆனந்த்தை தட்டிக் கேட்டார். சம்பவத்தன்று ஆனந்த்தும், கிருஷ்ணவேணியும் ஒன்றாக இருந்து கொண்டு தன்னை கிருஷ்ணவேணி உதாசீனப்படுத்தியதால் கோபமடைந்து ஆனந்த்தைக் கொன்று விட்டார்.
இதுகுறித்து போலீஸாரிடம் அசோகன் கொடுத்துள்ள வாக்குமூலம்...
கட்டட வேலைக்குப் போனபோது
நான் கட்டட வேலைக்கு சென்ற இடத்தில், கிருஷ்ணவேணியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவருடைய கணவர் இறந்துவிட்ட நிலையில், நான் அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தேன். அவருக்கு நான் சில உதவிகளும் செய்து கொடுத்தேன்.
இன்னொருவரைப் பிடித்தார் கிருஷ்ணவேணி
ஆனால் கடந்த 2 மாதங்களாக அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்த்துடன் கிருஷ்ணவேணிக்கு தொடர்பு ஏற்பட்டது. அதன்பின்பு அவர் என்னுடன் பேசுவதை குறைத்துக்கொண்டார். ஆனந்துடன் நெருக்கமாக இருந்து வந்தார். என்னை உதாசீனப்படுத்த ஆரம்பித்தார்.
நள்ளிரவில் வீட்டுக்குப் போனேன்
இதனால் நான் கோபமடைந்தேன். சம்பவத்தன்று நான் போனில் பேச முயன்றேன். ஆனால் கட் செய்து விட்டார். இதையடுத்து பைக்கை எடுத்துக் கொண்டு நள்ளிரவில் கிருஷ்ணவேணி வீட்டுக்குப் போனேன். அந்த நேரத்தில் அவர் என்னை எதிர்பார்க்கவில்லை. என்னை உடனடியாக இங்கிருந்து போய் விடுமாறு கூறினார்.
உள்ளே உட்கார்ந்திருந்த ஆனந்த்
அவரிடம், நீ என்னுடன் மட்டும்தான் பழக வேண்டும். அவனை விட்டு விடு என்று கூறினேன். ஆனால் கிருஷ்ணவேணி பதில் சொல்லவில்லை. வாசலை மறித்தபடி நின்று கொண்டு என்னை அங்கிருந்து போய் விடு என்று மட்டும் திரும்பத் திரும்பக் கூறினார். ஆனால் நான் அவரை தள்ளி விட்டு உள்ளே போனேன். அப்போது அங்கு ஆனந்த் படுத்திருந்தார்.
கொந்தளித்து விட்டேன்
இதனால் கோபமடைந்தேன், கடும் கோபத்துடன் இனிமேல் இந்தப் பக்கம் கூட நீ வரக் கூடாது என்று ஆனந்த்துடன் சண்டைக்குப் போனேன். அவருக்கும் எனக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆனந்த்தை நான் கடுமையாக தாக்கினேன். அவரை அடித்து உதைத்து வெளியே கொண்டு வந்தேன். கீழே கிடந்த செங்கல்லை எடுத்து தலையில் பலமாக அடித்தேன். அப்படியும் ஆத்திரம் தாங்காமல் பைக்கை எடுத்து அவர் மீது ஏற்றினேன். பின்னர் அரிவாளாலும் சரமாரியாக வெட்டினேன். இதில் அவர் இறந்து போனார் என்று கூறியுள்ளார் அசோகன்.
அநாதரவான குடும்பங்கள்
அசோகனுக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அசோகனின் மனைவியும், குழந்தைகளும் இப்போது அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட ஆனந்த்துக்கு 2 பெண் குழந்தைகள் உள்பட 3 குழந்தைகள் உள்ளனர்.