திருவள்ளூர் அதிமுக கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம்!
திருவள்ளூர் அருகே நடைபெற்ற அ.தி.மு.க கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எந்த வித அரசு ஒப்பந்தங்களையும் தங்களுக்கு தருவதில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஈபிஎஸ் அணியினர் மீது குற்றம் சாட்டியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் இரு வேறு அணிகளாக பிரிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி நீண்ட போராட்டங்களுக்கு இடையே மீண்டும் இணைந்தது. இரு அணிகளும் இணைந்தது முதலே இரு அணிகளின் ஆதரவாளர்களுக்கிடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.
ஈபிஎஸ் அணியினர் எங்களுக்கு எந்த வித முன்னுரிமையும் தருவதில்லை என ஓபிஎஸ் அணியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் இருந்த மூத்த நிர்வாகிகள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
மைத்ரேயன் தூக்கி வீசிய தீப்பொறி
ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்பி முதன்முதலில் இந்த குற்றச்சாட்டை தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். அணிகள் இணைந்ததே தவிர மனங்கள் இணையவில்லை என்று மதுசூதனன் கூறி இருந்தார். இந்த புகைச்சல் தர்மயுத்தம் 2.0 நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மதுசூதனன் புகார்
ஆனால் அந்த மாதிரி எதுவும் நடைபெற வில்லை. இந்நிலையில் ஆர்கே நகரில் தோல்வியடைந்த மதுசூதனன் தன்னுடைய தோல்விக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து அதிருப்தி தெரிவித்த போதும் பிரச்னை விஸ்வரூபம் எடுக்காமல் அமுக்கி விட்டனர்.
அதிமுக கூட்டத்தில் மோதல்
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் கிராமத்தில் அதிமுக சார்பில் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் முன்னிலையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எங்களுக்கு எந்த வித முன்னுரிமையும் தருவதில்லை என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மீது குற்றம் சாட்டினர்.
ஓபிஎஸ் அணி ஆதங்கம்
மேலும் எந்த வித அரசு ஒப்பந்தங்களையும் தங்களுக்கு தருவதில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஈபிஎஸ் அணியினர் மீது குற்றம் சாட்டினர், பின்னர் அனைவரையும் அமைச்சர் மாபா பாண்டியராஜன் சமாதான செய்து வைத்தார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.