பிள்ளையார் சதுர்த்தி மும்முரம் – “களிமண் பிள்ளையாரையே கரையுங்கள்”- திண்டுக்கல் ஆட்சியர் உத்தரவு!
திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியின்போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜை செய்யப்பட்ட பிறகு நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
இவ்வாறு கரைக்கப்படும் விநாயகர் சிலைகள் ரசாயன வண்ணப்பூச்சுகளுடன் நீர்நிலைகளில் கரைத்தால் அவை மாசுபடுகிறது.
களிமண் சிலைகள் மட்டுமே:
எனவே விநாயகர் சதுர்த்திக்கு களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் எவ்வித ரசாயன கலவை அற்றதுமான சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.
பெயிண்ட் கூடவே கூடாது:
இந்த சிலைகளையே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். பெயிண்ட் பூசப்பட்ட சிலைகள் கரைப்பதை தவிர்க்க வேண்டும்.
10 இடங்களில் மட்டுமே:
திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு:
பொதுமக்கள் பாரம்பரிய வழக்கப்படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என ஆட்சியர் வெங்கடாசலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.