வீரமங்கை சின்னம்மா.... சட்டசபையில் சொன்ன செல்லூர் ராஜூ - தப்பில்லை என்கிறார் ஓபிஎஸ்
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளிக்கும் முன்பாக‘வீரமங்கை சின்னம்மா’ என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை புகழ்ந்து பேசினார்.
சென்னை: ஜெயலலிதா சட்டசபையில் இருந்தவரை அவர் பேசும் ஒவ்வொரு பேச்சுக்கும் தட்டி தாளம் போட்டு சபையில் இசைக்கச்சேரி நடத்துவார்கள் அதிமுக உறுப்பினர்கள். இப்போது பெஞ்ச் தட்டுவது இல்லை என்றாலும் சசிகலாவின் புகழை பாடி அதை சபை குறிப்பில் ஏற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சட்டசபையில் இன்று விவாதத்திற்கு முன்பாக கேள்வி நேரத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பட்டன. இதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, சசிகலாவை புகழ்ந்து பேசினார். இதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க. சட்டசபை துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து ஆட்சேபம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது குற்றச்சாட்டுக்கள் கூற கூடாது என்றுதான் விதி உள்ளது. எனவே கட்சி பொதுச்செயலாளர் பெயரை மரியாதைக்காக சொல்வதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார்

துரைமுருகன்
செல்லூர் ராஜூ சட்டசபையில் சசிகலாவை சின்னம்மா என்று குறிப்பிட்டதற்கு துரைமுருகன் ஆட்சேபம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய துரைமுருகன்,
சட்டசபையில் இதுவரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி பேசுவதை கேட்டுள்ளோம். அதில் தவறு இல்லை. ஆனால் தற்போது புது வழக்கமாக சட்டசபையில் இல்லாதவர் பற்றி பேசுகிறார்களே. இது நியாயமா?ஆளும் கட்சியினரே இப்படி பேசும்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராகுல்காந்தி உள்பட பலர் பற்றி இங்கு பேசுவார்களே? அது சரியா? என்றார்.

தவறு இல்லை
அப்போது சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு, அமைச்சர் செல்லூர் ராஜூ தனது பேச்சில் சின்னம்மா பற்றி குறிப்பிட்டு பேசியதில் தவறு இல்லை என்றார்.
உடனே துரைமுருகன் எழுந்து, இது சட்டசபையா? என்றார். பிறகு அவர், இது சட்டமன்றம், அதை மன்றமாக நடத்துங்கள் என்றார்.

நீங்களும் பேசுங்கள்
இதற்கு சபாநாயகர் மீண்டும் பதில் அளித்தார். நான் ஏற்கனவே இதுபற்றி தெளிவாக கூறி விட்டேன். அமைச்சர் அவரது கட்சி பொதுச்செயலாளர் பற்றி பேசுகிறார். அது போல நீங்களும் உங்கள் கட்சி தலைவர் பற்றி இங்கு தாராளமாக பேசலாம். அதில் தவறில்லை எனறார்.

ஸ்டாலின் கேள்வி
உடனே ஸ்டாலின், அமைச்சர் பேசியதில் தவறில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை ஆளும் கட்சியினர் இப்படி சொல்வது எனது மனசாட்சிப்படி அது தவறாகும். ஆளும் கட்சியினர் சொல்வது போன்று நாங்களும் சொல்லலாம் என்று சபாநாயகர் கூறுகிறார். ஆனால் நாங்கள் அது போன்ற தவறை இங்கு பதிவு செய்ய மாட்டோம் என்றார்.

ஓபிஎஸ் விளக்கம்
இதற்கு பதிலளித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது குற்றச்சாட்டுக்கள் கூற கூடாது என்றுதான் விதி உள்ளது. எனவே கட்சி பொதுச்செயலாளர் பெயரை மரியாதைக்காக சொல்வதில் எந்த தவறும் இல்லை. இதை சபாநாயகரும் கூறி உள்ளார். எனவே நீங்கள் உங்கள் தலைவர் பற்றி பேசினால் பேசுங்கள். இல்லையென்றால் விட்டு விடுங்கள் என்று கூறினார்.

நினைவிருக்கிறதா?
உடனே சபாநாயகர் தனபால், அவரவர் கட்சி தலைவர்களை சபையில் வாழ்த்தியும், பாராட்டியும் பேசுவது நடைமுறையில் உள்ளது. எனவே சின்னம்மா பற்றி இங்கு குறிப்பிட்டு பேச எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என்றார்.
அப்போது எழுந்து பேசிய முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், தயவுக்கூர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இதுபற்றி சிந்தித்து, இதற்கு முன்பு தாங்கள் பேசியதை நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். நீங்கள் பேசும்போது எந்த பதவியிலும் இல்லாதவர்கள் பற்றி பேசி இருப்பது சபைக் குறிப்பில் பதிவாகி உள்ளது. தாய், தகப்பன், நண்பர்கள் பற்றியெல்லாம் பேசி இருக்கிறீர்கள் என்று கூறினார்.

மக்கள் கவனிக்கிறார்கள்
அதற்கு பதில் கூறிய மு.க.ஸ்டாலின், நீங்கள் பேசியதால் நாங்களும் பேசலாம் என்று சொல்கிறீர்கள். நான் உங்களிடம் கேட்க விரும்புவதெல்லாம் நாங்கள் முன்பு தவறு செய்திருந்தாலும், அதே தவறை தற்போதும் தொடர வேண்டுமா? என்பதே என் கேள்வி. இல்லை. இதுதான் தொடர்ந்து நடக்கும். இப்படித்தான் பேசுவோம். என்றால் மக்கள் உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றார்.

சட்டசபையில் தவறில்லை
இதற்கு பதிலளிக்க சபாநாயகர் தனபால், கட்சித் தலைவரை பாராட்டி பேசுவதை உறுப்பினர்கள் தொடரலாம். சின்னம்மா பற்றி இங்கு பேசுவது தவறில்லை என்று முடித்தார். அதன் பிறகு துரைமுருகன் மீண்டும் இதுபற்றி பேசி விளக்கம் கேட்க முயற்சி செய்தார். ஆனால் அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி கொடுக்க வில்லை. இதனால் அந்த விவகாரம் அத்துடன் முடி வுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications