விரைவில் காலை உணவு திட்டம்... வரலாற்றில் தடம் பதிக்கிறாரா எடப்பாடி பழனிசாமி?
Recommended Video
சென்னை: தமிழகத்தில் விரைவில் காலை உணவுத்திட்டத்தை கொண்டு வந்து வரலாற்றில் இடம் பிடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
காமராஜர் அறிமுகம் செய்த மதிய உணவுத்திட்டத்தை மேலும் அழகுப்படுத்தி அந்த திட்டத்தை புத்துயிர் செய்து சத்துணவு திட்டமாக செயல்படுத்தினார் எம்.ஜி.ஆர்.
இதன்மூலம் ஏழை எளிய வீட்டு பிள்ளைகள் கல்வியுடன் சேர்த்து உணவும் கிடைப்பதால், சிறுவயதிலேயே வேலைக்கு செல்வதை தவிர்த்து அரசு பள்ளிகளில் படிப்பை தொடரும் நிலை உருவானது.
விரைவில் அறிவிப்பு
அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் மதியம் மட்டுமே வழங்கப்படும் உணவை இனி வரும் காலங்களில் காலையிலும் வழங்குவது பற்றி தீவிர யோசனையில் உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் அதை செயல்படுத்த ஆவணங்கள் தயாராகி வருகின்றனவாம்.
மதிய உணவு திட்டம்
ஏழை எளிய வீட்டு பிள்ளைகளும், வறுமையான சூழலில் வளரும் குழந்தைகளும், குடும்ப நிலை காரணமாக படிப்பை கைவிடக்கூடாது என்பதற்காக காமராஜர் முதல் முறையாக மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். அதன் பிறகு முதல்வரான எம்.ஜி.ஆர். அந்த திட்டத்தை மேலும் சிறப்பு செய்யும் வகையில் சத்துணவு என்ற பெயரில் புதுமைகளை கொண்டு வந்தார்.
2 கட்சிகள்
சத்துணவு திட்டம் விவகாரத்தில் காங்கிரஸ், அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் உரிமை கொண்டாடும். திமுக ஆட்சியின் போது ஒரு முறை சட்டமன்றத்திலேயே இரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் இந்த திட்டத்தை உரிமை கொண்டாடி வாதம் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆவணம்
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலம் காலத்துக்கும் வரலாற்றில் அழிக்க முடியாத வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என எண்ணிய நிலையில், அவருக்கு காலை உணவுத் திட்டத்தை பற்றி கூறியுள்ளனர் அவருடைய வட்டத்தில் உள்ள கோட்டை அதிகாரிகள். இதையடுத்து அது தொடர்பான ஆவணங்கள் தயாராகி வருகிறதாம்.