ஸ்காட்லாந்து யார்டு போலீஸுக்கு இணையானவர்கள் தமிழக போலீஸ்- முதல்வர் புகழாரம்
ஸ்காட்லாந்து யார்டு போலீஸுக்கு இணையான திறமையை தமிழக போலீஸார் பெற்றுள்ளனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம் சூட்டினார்.
ஆவடி: போலீஸாரால் தமிழகத்துக்கு பெருமை என்றும் அவர்கள் ஸ்காட்லாந்து யார்டு போலீஸுக்கு இணையான திறமையை பெற்றுள்ளனர் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் பொங்க பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு பதக்கங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், தோல்விஎன்பது முடிவல்ல; வெற்றிக்கான துவக்கமே. தமிழக போலீஸார் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக செயல்படுகின்றனர். காமன்வெல்த், ஆசிய போட்டி உள்ளிட்ட போட்டிகளில் போலீஸார் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தென் மண்டல துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது #TamilNadu pic.twitter.com/qfWBbkOFcr
— E K Palaniswamy (@CMOTamilNadu) August 26, 2017
திறமையான வீரர்களை தமிழக காவல் துறை பெற்றுள்ளது. அன்பு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றை விளையாட்டு கொடுக்கும். தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வீரர்களை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. தமிழகம் துப்பாக்கி சுடுதலில் சிறந்த வீரர்களை உருவாக்கி வருகிறது என்றார் அவர்.