காவிரி மேலாண்மை வாரியத்தை கர்நாடகம் எதிர்த்தாலும் 15 ஆண்டுகளுக்கு ஒன்றும் செய்ய முடியாது- எடப்பாடி
காவிரி மேலாண்மை வாரியத்துக்கு கர்நாடகம் எதிர்த்தாலும் 15 ஆண்டுகளுக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சேலம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகம் எதிர்த்தாலும் 15 ஆண்டுகளுக்கு அவர்களால் மேல்முறையீடு செய்ய முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சேலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயலலிதா விட்டு சென்ற பணியை அதிமுக அரசு சிறப்பாக செய்து வருகிறது. தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா அறிவித்த அம்மா இருசக்கர வாகன திட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
காவிரி நீர் முறைப்படுத்தும் குழு
அந்த திட்டம் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று தொடங்கவிருக்கிறோம். பணிக்கு செல்லும் மகளிருக்கு ஒவ்வொரு ஆண்டு ஒரு லட்சம் இரு சக்கர வாகனங்கள் மானிய விலையில் வழங்கப்படும். ஏற்கெனவே ஜெயலலிதா காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்குக்கு தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
6 வாரத்துக்குள் மேலாண்மை வாரியம்
அந்த தீர்ப்பில் நதிகள் எந்த மாநிலத்துக்கு சொந்தமில்லை என்றும் நதிகள் தேசிய சொத்து என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. அதுமட்டுமல்லாது காவிரி மேலாண்மை வாரியம் , காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை 6 வாரத்துக்குள் மத்திய அரசு அமைத்து குடியரசு தலைவர் ஒப்புதலை பெற வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை ஏற்க வேண்டும்
15 ஆண்டுகள் இந்த தீர்ப்பு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை மத்திய அரசு கட்டாயம் நடைமுறைப்படுத்தும். எனவே கர்நாடக அரசு எதிர்த்தாலும் 15 ஆண்டுகளுக்கு தீர்ப்பை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
எதுவும் தெரியாது
பிரதமர் கூறியதால்தான் அதிமுக இணைப்பு சாத்தியமாயிற்று என்று ஓபிஎஸ் கூறியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றார் எடப்பாடி பழனிச்சாமி. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகம் ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.