சவுதியில் கை துண்டிக்கப்பட்ட கஸ்தூரிக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி- முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: சவுதி அரேபியாவில் வீட்டு உரிமையாளரால் கை துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்ட தமிழக பெண் கஸ்தூரி, விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினார். அவரை தமிழக அதிகாரிகள் வரவேற்றனர். இந்நிலையில் கஸ்தூரிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்துள்ள விண்ணம்பள்ளி மூங்கிலேரி கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி. குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த ஜூலை மாதம் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக சென்றார். அங்கு அவருக்கு அதிகப்படியான வேலை கொடுத்து, சரியாக உணவு வழங்காமல் வீட்டு உரிமையாளர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.

இது தொடர்பான பிரச்னையில் தனது வலது கையை துண்டித்த வீட்டின் உரிமையாளர், 3வது மாடியில் இருந்து இருந்து கீழே தள்ளிவிட்டதாக கஸ்தூரி குற்றம் சாட்டியிருந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, அருகில் உள்ள வீட்டில் வசித்த இந்தியர் ஒருவர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
இந்த தகவலை அடுத்து கஸ்தூரியை மீட்டுக் கொடுக்கும்படி அவரது உறவினர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம், கடந்த மாதம் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், அவரை இந்தியாவுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில், சவுதியில் இருந்து அவர் இன்று நண்பகலில் விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது கஸ்தூரியை பேட்டி எடுக்க முயன்ற செய்தியாளர்களுடன் அதிகாரிகள் தடுத்து சண்டையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் உறவினர்கள் உதவியுடன் கஸ்தூரி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட கஸ்தூரிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூபாய் 10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications