நலம் விசாரித்த பாலபாரதி எம்.எல்.ஏ... நன்றி சொன்ன முதல்வர் ஜெ.,
சென்னை: சட்டசபையில் தன்னிடம் நலம் விசாரித்த கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ பாலபாரதிக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்தார். முதல்வரின் இயல்பான பேச்சு மகிழ்ச்சியளித்தது என்று இந்த நிகழ்வை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எம்.எல்.ஏ பாலபாரதி.
தமிழக சட்டசபையில் காரசாரமான விவாதங்களுக்கு இடையே சில கலகலப்பான சம்பவங்களும், ஒரு சில நேரங்களில் நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடைபெறுவதுண்டு.
மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் இந்த நேரத்தில் சட்டசபையில் நிகழ்வுக்கிடையேயான ஓய்வின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி எம்.எல்.ஏ பாலபாரதி, முதல்வர் ஜெயலலிதாவிடம் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
"எப்படி இருக்கீங்க மேடம், உடம்பு பரவாயில்லையா?" என அவரின் நலம் விசாரித்தார்.
இதற்கு முகத்தில் புன்னகையை தவழவிட்ட முதல்வர் ஜெயலலிதா, " நன்றாக இருக்கிறேன் மா" என மலர்ச்சியோடு உற்சாகமாக குரலில் தெரிவித்தார். தொடர்ந்து தன்னை நலம் விசாரித்த எம்.எல்.ஏ பாலபாரதிக்கு நன்றியும் தெரிவித்தார் முதல்வர்.
இந்த நிகழ்வை தனது முகநூலில் பதிவிட்டுள்ள பாலபாரதி, "சபை நடவடிக்கைகளுக்கிடையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்தித்தபோது அவர் உடல்நலம்பற்றி விசாரித்தேன்." நன்றாக இருக்கிறேன் மா "என்று முகமலர்ச்சியோடும், உற்சாகமான குரலோடும் தெரிவித்தார். மறவாமல் நன்றியும் கூறினார். இயல்பான அவரது பேச்சு மகிழ்ச்சியளித்தது என்று பதிவிட்டுள்ளார்.