முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு வருகை!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க டெல்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் குழு நேற்று இரவு சென்னை வந்தது.
கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஜெயலலிதா தொடர்ந்து டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து மருத்துவ நிபுணர் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே வரவழைக்கப்பட்டார்.
டாக்டர்கள் குழுவினர் சீரான இடைவெளியில் முதல்வரின் உடல்நிலையை பரிசோதித்து வருகின்றனர்.
தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று 14-வது நாளாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் சிவக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவினர் அவருடைய உடல்நிலை குறித்து பல்வேறு பரிசோதனைகளை நேற்றும் மேற்கொண்டனர்.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கில்மானி, மயக்கவியல், தீவிர சிகிச்சை நிபுணர் பேராசிரியர் டாக்டர் அஞ்சன் டிரிக்கா மற்றும் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதீஷ் நாயக் ஆகியோர் அடங்கிய மருத்துவ நிபுணர் குழுவினர் நேற்று மாலை 5 மணி அளவில் டெல்லியில் இருந்து புறப்பட்டு, இரவு 8.30 மணி அளவில் சென்னை வந்தனர்.
அந்த டாக்டர்கள் குழுவினர் இரவு அப்பல்லோ மருத்துவமனை சென்று, முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் உடன் கலந்து ஆலோசித்தனர். பின்னர் ஜெயலலிதாவின் உடல்நிலையைப் பரிசோதனை செய்தனர்.
தொடர்ந்து அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications