எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெ. அஞ்சலி: நாளைய பிரதமரே… கோஷமிட்ட தொண்டர்கள்
சென்னை: எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் ஜெயலலிதாவே நாளைய பிரதமரே வாழ்க என்று முழக்கமிட்டு வரவேற்றனர் தொண்டர்கள்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 26-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மெரினா கடற்கரை பகுதி முழுவதும் அ.தி.மு.க. - கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன.

தமிழகத்தின் இணையற்ற தலைவரும் தொடர்ந்து மூன்று முறை முதல்வராகி சாதனை படைத்தவருமான எம்ஜிஆர் கடந்த 1987ம் ஆண்டு, இதே நாளில் இயற்கை எய்தினார். அவர் மறைந்து கால் நூற்றாண்டுகள் கடந்தாலும் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறார். அவர் மறைவுக்குப் பிறகு பிறந்தவர்களும் கூட மக்கள் திலகம் என்றும் புரட்சித் தலைவர் என்றும் அவரைப் போற்றி வருகின்றனர்.
இன்றும் சென்னையில் உள்ள அவரது சமாதியில் கூட்டம் அலைமோதுகிறது. ஆறிலிருந்து அறுபது வரை அவர் சமாதி மீது காது வைத்து, அவரது கடிகார ஓசையைக் கேட்டு, உள்ளே தலைவர் உறங்குகிறார் என்று சந்தோஷப்படுவதைப் பார்க்க முடிகிறது. ஆண்டுதோறும் எம்ஜிஆர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் கட்சி பேதமற்று அனைத்துத் தலைவர்களும் மரியாதை செலுத்தும் நாட்களாகிவிட்டன. அதிமுகவின் நிறுவனர், தமிழகத்தை மூன்றுமுறை ஆண்டவர் என்ற முறையில் அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்களில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா இன்று காலை 10.45 மணிக்கு அங்கு வந்தார். அவரது கார் அங்கு வந்ததும் அ.தி.மு.க. தொண்டர்கள் எழுச்சியுடன் புரட்சித்தலைவி வாழ்க, நாளைய பிரதமரே வாழ்க என்று கோஷமிட்டனர்.
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
விழா மேடையில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி எடுத்தனர். அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி மொழியை படிக்க தொண்டர்கள் பின் தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், உள்பட பலர் கலந்து கொண்டனர். மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், பொதுச்செலயாளர் இசக்கிமுத்து, பெரியதுரை, பிரபு, நாதன், அர்ச்சுனன் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications