சோவின் மறைவிற்கு ஓ. பன்னீர் செல்வம் நேரில் சென்று அஞ்சலி
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி மறைவிற்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்தார்.
சென்னை: மறைந்த துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சோவின் மறைவு பத்திரிகை துறைக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இழப்பு என்று முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல் நலமில்லாமல் இன்று அதிகாலை அப்போலோ மருத்துவமனையில் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி உயிரிழந்தார். அவரது உடல், எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மலர் வளையம் வைத்து சோவிற்கு மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் உடன் சென்றனர்.
பின்னர், சோ ராமசாமி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "மறைந்த ஜெயலலிதாவின் மீது அளவற்ற பாசமும், அன்பும் கொண்டவர் சோ. சோவின் மறைவு பத்திரிகை துறைக்கு மிகப்பெரிய இழப்பு" என்று முதல்வர் கூறியுள்ளார்.
அவரது உடலுக்கு, திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.