ஆடிப்பெருக்கு: மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க ஜெயலலிதா உத்தரவு
சென்னை: ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் வகையில் மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முதல்வர் ஜெயல்லிதா இதற்காக உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
விவசாயம் செழிக்க வேண்டி காவேரி அன்னைக்கு மலர் தூவி வணங்கும் விழா எனப்படும் ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், 3.8.2015 அன்று வருகின்ற ஆடிப் பெருக்கு விழாவினை தமிழக மக்கள் சீரோடும், சிறப்போடும், மகிழ்ச்சி யோடும் கொண்டாடும் வண்ணம், மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று காவேரி டெல்டா பாசனப் பகுதி மக்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும் எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு, மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீர்வரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, காவேரி டெல்டா பாசனப் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் ஆடிப்பெருக்கினை கொண்டாடும் வகையில் 26.7.2015 முதல் 3.8.2015 வரை மேட்டூர் அணையிலிருந்து, தற்போது குடிநீருக்காக திறந்துவிடப்பட்டுள்ள 2000 கனஅடி நீருடன், கூடுதலாக வினாடிக்கு 4,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.