மே 2ல் டெல்லி செல்லும் முதல்வர் பழனிசாமி... சந்திக்க நேரம் கொடுப்பாரா மோடி?
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மே 2ம் தேதி டெல்லி செல்லும் முதல்வர் பழனிசாமி காவிரி விவகாரம் பற்றி ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரம் கேட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னை : நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மே 2ம் தேதி டெல்லி செல்லும் தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். மே 3 ம் தேதி காவிரி வாரியம் தொடர்பாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில் பிரதமர் முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தரப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் மே 2ம் தேதி நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார்.
இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க முதல்வர் பழனிசாமி நேரம் கேட்டுள்ளதாக தெரிகிறது. மே 3ம் தேதி காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடியும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் பழனிசாமியை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதுவரை மே 2ம் தேதி சந்திப்புக்கான நேரம் குறித்து பிரதமர் அலுவலகம் எந்த தகவலையும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.