என் ஒவ்வொரு கையெழுத்தும் கோடி பேரை சந்தோஷப்படுத்தும்.. “நீயா நானா” பெண் பேச்சால் நெகிழ்ந்த ஸ்டாலின்!
சென்னை: நீயா நானா விவாத நிகழ்ச்சியில், தமிழக அரசின் ஒரு அரசாணை தனது கண்ணீரை துடைத்ததாக கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் உருக்கமாகப் பேசி இருந்த நிலையில், அதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமையோடு பேசி இருக்கிறார்.
தமிழக அரசின் ஒரு அரசாணை தனது பல ஆண்டுகால கண்ணீருக்கு விடிவு கொடுத்ததாக, அண்மையில் நீயா நானா நிகழ்ச்சியில் ஏழைப் பெண் ஒருவர் கண்ணீருடன் பேசியிருந்தார். கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த ஒரு அரசாணை மூலம் தனக்கு மீட்சி கிடைத்ததாக கூறி இருந்தார் தனசக்தி என்ற அந்தப் பெண். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாகப் பரவியது. இந்நிலையில், தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது அந்த வீடியோவை குறிப்பிட்டுப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

திருவள்ளூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சி. அதில், ஒரு சகோதரி பேசியிருக்கிறார். "என் கணவர் என்னை கைவிட்டுவிட்டார்! எல்லா ஆவணங்களையும் எடுத்து கொண்டு போய்விட்டார். எட்டு வருடமாக என்னால் ரேஷன் கார்டை மீட்க முடியவில்லை! கணவனால் கைவிடப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் ரேஷன் கார்டு வாங்குவதில் பெரிய பிரச்சினை இருந்தது. ஏன் என்றால், குடும்பத் தலைவர் என்று அவர் பெயர் இருக்கும். நம்பரும் அவருடையதாக இருக்கும். அவர்களிடமிருந்து ரேஷன் கார்டை மீட்க டைவர்ஸ் வாங்கியிருக்க வேண்டும்.
டைவர்ஸுக்குக் கோர்ட்டுக்கு அலைவேனா.. என் உடல் நலனை பார்ப்பேனா? ஆனால், என்னிடம் உண்மை இருக்கிறது என்ற நம்பிக்கையோடு அலைந்தேன். அப்போதுதான் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று வந்த ஒரு அரசாணையைப் பற்றிக் கேள்விpபட்டேன்.. இந்த மாதிரி பிரச்சனை இருந்தால், விசாரணை நடத்தித் தாசில்தாரே கணவர் பெயரை நீக்கிவிட்டு ரேஷன் கார்டைக் கொடுக்கலாம்.
அதை வைத்துக்கொண்டு, தாசில்தார் எல்லாவற்றையும் விசாரித்து, ஐந்தே நிமிடத்தில் எனக்கு ரேஷன் கார்டு கொடுத்தாங்க" என்று தழுதழுத்த குரலோடும் கண்ணில் கண்ணீரோடும் அந்த சகோதரி பேசினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியிருக்கிறது.
என்னுடைய ஒவ்வொரு கையெழுத்தும், ஒவ்வொரு அரசாணையும், ஒவ்வொரு சட்டமும், கோடிக்கணக்கான மக்களுடைய மனங்களில் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது. விளிம்பு நிலையில் வாழும் குரலற்றவர்களின் வாழ்க்கையை ஒருபடியாவது முன்னேற்ற உதவுகிறது!
இன்னொரு வீடியோ, அதில், யார் அடுத்து ஆட்சிக்கு வர வேண்டும்! என்று யூடியூப் சேனலில், ஒரு அம்மாவிடம் கேள்வி கேட்கிறார்கள். "ஸ்டாலின் வரவேண்டும் என்று நினைக்கிறோம். வேலைக்குப் போனாலும் - போகாவிட்டாலும் - பெற்ற பிள்ளை கொடுக்காவிட்டாலும் - ஸ்டாலின் எங்களுக்கு மகனாக இருந்து 1000 ரூபாய் கொடுக்கிறார். அவர்தானே பலரை ஆபத்திலிருந்து காப்பாற்றி வருகிறார். இதற்கு மேல் என்ன செய்வார்." என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
இப்படி ஏழைகளின் கண்ணீரைத் துடைத்து அவர்களின் முகங்களில் சிரிப்பை வரவைப்பதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கான ஊக்கமாக நான் எடுத்து கொள்கிறேன். இதுபோன்று, தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 15 இலட்சம் மகளிரும், எங்கள் அண்ணன் ஸ்டாலின் வழங்கும் தாய்வீட்டுச்சீர் என்று பாசத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்.
உரிமைத்தொகையால் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்து, உள்ளூர் சிறுவணிகர்களின் வியாபாரமும் பெருகி இருக்கிறது. இது சமூகப்புரட்சித் திட்டம் மட்டுமல்ல! பொருளாதாரப் புரட்சித் திட்டமாகவும் இன்றைக்கு மாறியிருக்கிறது." எனக் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications