எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. இதுதான் மேட்டர்!
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார்.
மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை ஜூலை 15 ஆம் தேதியான நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ், பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. ரேஷன் கார்டு, ஆதார் கார்டு பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு, அன்றைய தினமே தீர்வு காணப்படும். நவம்பர் மாதம் வரை, 10,000 முகாம்கள் நடைபெற உள்ளன.
எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை விமர்சித்து வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக இந்த திட்டத்தை பற்றி விமர்சனம் செய்து பேசி வருகிறார். "அடுத்தாண்டு தேர்தல் வருவதால் திமுக நடத்தும் நாடகம் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்" என விமர்சித்து பேசியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அவரது பேச்சுக்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.48.17 கோடி மதிப்பிலான 47 பணிகளை திறந்து வைத்து, ரூ.113.51 கோடி மதிப்பிலான 12 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி விமர்சனம் என்ற பெயரில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார் " என தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "விமர்சனம் என்ற பெயரில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்காக அவருக்கு நான் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த திட்டத்தை பார்த்து அவர் பயப்படுகிறார். அதனால் தான் தொடர்ச்சியாக இந்த திட்டத்தை பார்த்து பேசிக்கொண்டு இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி ஒருவரே போதும். இந்த திட்டத்தில் என்னென்ன சேவைகள் இருக்கிறது, என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்லி இருக்கிறார். இந்தத் திட்டத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் எடப்பாடி சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து விமர்சித்தும் பேசினார். இது குறித்து பேசிய அவர் "சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் வருவது போல பஸ்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அந்த பஸ்ஸிலிருந்த்து புகை வருவதுபோல, எடப்பாடி பழனிசாமி வாயிலிருந்து பொய்யும், அவதூறும் வந்து கொண்டிருக்கிறது" என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications