நல்லா பார்த்துக்கோங்க.. இதுதான் முதல்வர் விஜய்யின் அதிகாரப்பூர்வ புகைப்படம்! ஆபீஸ்களில் வைப்பார்கள்
சென்னை: தமிழக அரசு அலுவலகங்களில் இனி 'தளபதி' தரிசனம்! தமிழக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்து, கோட்டையில் தடம் பதித்துள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் தற்போது அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை (பி.ஆர்.4) சார்பில் அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அரசுச் செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப., கையெழுத்திட்டுள்ள அந்த அரசாணையில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம், அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் இதர அரசு கட்டடங்களில் உரிய முறையில் காட்சிப்படுத்த ஏதுவாக இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அந்தப் புகைப்படத்தில், முதலமைச்சர் விஜய், வெள்ளை நிறச் சட்டை மற்றும் கறுப்பு நிற கோட் அணிந்து, புன்னகையுடன் கூடிய பக்கத்து வீட்டு பையன்போன்ற ஈஸியான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். மஞ்சள் நிறப் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் புகைப்படம், மிகவும் நேர்த்தியாகவும் அதிகாரப்பூர்வத் தன்மையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஒவ்வொரு அரசு அலுவலகத்தின் வரவேற்பு அறையிலும், முதலமைச்சரின் அறை மற்றும் முக்கியமான பொது இடங்களிலும் இனி இந்தப் புகைப்படம் இடம்பெறும். தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது தலைவனை முதலமைச்சர் நாற்காலியில் பார்த்த மகிழ்ச்சியில் இருந்த வேளையில், அரசின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவர்களுக்கு இரட்டிப்பு இனிப்பை வழங்கியுள்ளது.
நிர்வாக ரீதியாகத் தனது பணிகளைத் துரிதப்படுத்தியுள்ள முதலமைச்சர் விஜய், தற்போது அரசு ஆவணங்கள் மற்றும் அலுவலகங்களிலும் தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கிவிட்டார் என்பதையே இந்த அறிவிப்பு உணர்த்துகிறது.












Click it and Unblock the Notifications