15ம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை: தென் மாவட்டங்களிலும் பெய்யும்!
சென்னை: காற்றழுத்த தாழ்வு நிலை மேலடுக்கு சுழற்சியாக மாறி உள்ளதால், அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலடுக்கு சுழற்சியாக மாறி உள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி கேரளாவுக்கு அருகே நிலை கொண்டுள்ளது. இதனால், தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்றார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, கடந்த 9ம் தேதி புதுச்சேரியில் கரையைக் கடந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந் நிலையில் இந்த காற்றழுத்தத் தாழுவு நிலை தமிழக நிலப்பகுதியில் பயணித்து வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, மறைந்து விட்டது.
ஆனாலும் கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களி்ன் மழை பெய்து வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி, வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அதிகபட்சமாக 8 செமீ மழையும், சேலம்- ஏற்காட்டில் 6 செமீ, நீலகிரியில் 5 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
இந்த மழையால் தமிழக அணைகளும் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், கேரளாவை ஒட்டிய கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், 15ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. இந்த பருவமழை காலத்தில் தமிழகத்துக்கு சராசரியாக 44 செமீ மழை கிடைக்கும்.
நேற்று வரை 30 செ.மீ மழை கிடைத்துள்ளது. சென்னையில் 47 செ.மீ, கடலூரில் 50 செ.மீ, காஞ்சிபுரத்தில் 50 செ.மீ, தர்மபுரியில் 31 செ.மீ, நெல்லையில் 45 செ.மீ, திருவள்ளூரில் 46 செ.மீ மழையும் பெய்துள்ளது.
ஆனால் விருதுநகர், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களில் போதுமான அளவு மழை பெய்யவில்லை.












Click it and Unblock the Notifications