கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி சிறையில் அடைப்பு
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: பேராசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியர் நியமனத்துக்கு துணைவேந்தர் கணபதி, ரூ.30 லட்சம் லஞ்சமாக கேட்டதாக சுரேஷ் என்பவர் கடந்த 3 தினங்களுக்கு முன் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் அதிகாரிகள் துணை வேந்தர் கணபதியை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை சுரேஷிடம் இருந்து கணபதி ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் மீதம் 29 லட்சம் ரூபாய் காசோலையையும் பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.
இதையடுத்து அங்குள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் திருச்சி நவல்பட்டில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை கணபதியை கைது செய்தனர்.
பணத்தை பெற உதவி செய்த பல்கலை வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கணபதியின் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் பணம் ஏதும் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் துப்புரவு பணியாளர்களை கொண்டு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்நிலையில் அந்த தொட்டியிலிருந்து ரூ. 2000 நோட்டுகள் கிழிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கணபதியிடம் 8 மணிநேரத்துக்கும் மேலாக போலீஸார் விசாரணை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனைக்கு வந்தபோது வீட்டிலிருந்த தடயங்களை அழிக்க முயன்றதாக கணபதியின் மனைவி சொர்ணலதாவும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கணபதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 16-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.